பூண்டு: டான்சிலிட்டிஸை போக்கும் ஆண்மையை அதிகரிக்கும்

Garlic: Cures tonsillitis

by SAM ASIR, Aug 25, 2020, 14:58 PM IST

"வெண்பாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு?" என்று கேட்பது சரியான கேள்வி. "வெள்ளைப்பூண்டுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு?" என்று கேட்டால்? அதுவும் சரியான கேள்விதான்! ஆம், கவிஞர் வைரமுத்து பிறந்த வடுகபட்டி என்ற ஊர்தான் தமிழகத்தின் மிகப்பெரிய வெள்ளைப்பூண்டு சந்தையாகும். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு வடுகபட்டி சந்தைக்குக் கொண்டு வந்து விற்கப்படுகிறது. பூண்டு பல பருவ பயிர் வகையைச் சேர்ந்தது. கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயரத்தில் பயிர் செய்யக்கூடியது பூண்டு. கொடைக்கானல் பூண்டு முதல் ரகம், ஊட்டி பூண்டு இரண்டாம் ரகம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், காஷ்மீர் மற்றும் சீனா ஆகிய இடங்களிலிருந்து வருவது மூன்றாம் ரகம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் மலைப்பூண்டு, நாட்டுப் பூண்டு என்பதே பெரிய வகையாக அறியப்படுகிறது.


வெள்ளைப்பூண்டிலுள்ள சத்துகள்

வெள்ளைப் பூண்டு ஒரு மணமூட்டியாகும். 10 முதல் 20 பல் (clove) சேர்ந்து ஒரு பூண்டாகக் காணப்படுகிறது. பூண்டின் ஒரு பல்லில் ( 3 கிராம்) ஒரு நாளைக்கு ஒரு நபருக்குத் தேவையான மாங்கனீசு சத்தில் 2 சதவீதம், வைட்டமின் 2 சதவீதம், வைட்டமின் சியில் 1 சதவீதம், செலினியத்தில் 1 சதவீதம் கிடைக்கிறது. 4.5 கலோரி ஆற்றல், 0.2 கிராம் புரதம் மற்றும் 1 கிராம் கார்போஹைடிரேடு, 0.06 கிராம் நார்ச்சத்து ஆகியவையும் உள்ளது.

சாதாரண சளி

12 வாரம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தினமும் வெள்ளைப்பூண்டு சாப்பிடுகிறவர்களுக்கு அதைச் சாப்பிடாதவர்களுக்குச் சளி பிடிக்கும் வாய்ப்பை விட 63 சதவீதம் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. சளி தொல்லை மற்றவர்களுக்கு 5 நாள் நீடித்தால் பூண்டு சாப்பிடுவோருக்கு 1.5 நாளில் குணமாகிவிடுகிறது.

உயர் இரத்த அழுத்தம்

24 வாரக் காலம் நடத்தப்பட்ட ஆய்வில் 600 முதல் 1,500 மில்லி கிராம் வெள்ளைப்பூண்டு சாறு பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் இரத்தக்கொதிப்பு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளைப்பூண்டைத் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு கூடாது. வெள்ளைப் பூண்டின் சாற்றை மாத்திரையாக்கி இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக நாம் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கலாம்.

இரத்தக் கொழுப்பு

புலால், எண்ணெய் பொருள் சாப்பிட்டால் அஜீரணம் உருவாகாமல் மட்டுமல்ல, இரத்தத்தில் கொழுப்பு சேராமலும் வெள்ளைப்பூண்டு காப்பாற்றும். அதிக கொழுப்பு, எண்ணெய் பொருள் எடுத்தால் வெள்ளைப்பூண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற பழக்கத்தை முன்னோர் வைத்துள்ளனர்.

அடிநா அழற்சி (டான்சில்ஸ்)

வெள்ளைப் பூண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் அடிநா அழற்சி என்னும் டான்சில்ஸ் பாதிப்பைக் குணமாக்கும். வெள்ளைப்பூண்டு, டான்சிலிட்டிஸ் (Tonsillitis) வீக்கத்தைக் குறைக்கும் . பூண்டு சாறு எடுப்பது எளிதல்ல. பூண்டை சட்னி மாதிரி அரைத்து வெள்ளை துணியில் தேய்த்து அனலில் காட்டி பிழிந்தால் சாறு கிடைக்கும். பத்து மில்லி பூண்டு சாற்றில் அதே அளவு தேன் கலந்து பத்து நாளைக்கு டான்சில் பகுதியில் தடவினால் வீக்கம் குறையும். தடவ இயலாவிட்டால் குழந்தைக்கு விழுங்கக் கொடுத்தாலும் வீக்கம் குறையும்.

குழந்தை பாக்கியம்

கருமுட்டை உருவாவதற்கும், மாதவிடாயைச் சீராக்குவதற்கும் வெள்ளைப்பூண்டு மிகச்சிறந்த உணவு. எடுத்துக்காட்டாக 28 நாள் மாதவிடாய் சுற்று கொண்ட பெண்கள் இருந்தால் 10ஆம் நாளிலிருந்து தினமும் பூண்டைச் சேர்த்து வரலாம். கருமுட்டை உருவாகிறதை ஊக்கப்படுத்தி குழந்தை செல்வத்தை தரும். தினமும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பாலியல் நாட்டம்

பூண்டு உடல்நலத்திற்கு நன்மை செய்வதோடு பாலியல் நாட்டத்தையும் அதிகரிக்கிறது. வெள்ளைப்பூண்டிலுள்ள அல்லிசின் என்ற கூட்டுப்பொருள் பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் இது ஏற்றது. ஆனால், ஒரே நாளில் இது பலன் தராது. தொடர்ந்து வெள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் பாலுறவு நாட்டம் அதிகரிக்கும்.

பூண்டின் மற்ற மருத்துவ பலன்கள்

வேளாண் பல்கலைக்கழகம் சுருக்கமாக, பூண்டினால் கட்டிகள், சொறி சிரங்கு, இருமல், இரைப்பு, வயிற்றுப்புழு, வாதநோய், சீதக் கழிச்சல் நீங்கும். ஆண்மை உண்டாகும் என்று கூறியுள்ளது.

உடல் எடை

தினமும் சிறிய வகை பூண்டில் நான்கு முதல் ஆறு பல் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும்.

பொடுகு தொல்லை

புதினா, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பொடுகு மறைந்து, கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.

தாய்ப்பால்

தாய்ப்பால் சுரப்பை வெள்ளைப்பூண்டு தூண்டுகிறது. இதற்கு வெள்ளைப்பூண்டு கஞ்சி வைத்துச் சாப்பிட வேண்டும்.

தேவையான பொருள்கள்: பூங்கார் அரிசி - 150 கிராம், பூண்டு - 50 கிராம், பாசிப் பருப்பு - 50 கிராம், காரட் - 25 கிராம், மோர் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் கேரட் மற்றும் பூண்டை நறுக்கி நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பைப் போட்டுக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிநிலை வந்தவுடன் பூங்கார் அரிசியைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும். நன்கு வேக வைத்து கஞ்சி பதம் வந்தவுடன் நீராவியில் வேக வைத்த பூண்டு, கேரட் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்துக் கலக்கி இறக்கி வைக்கவும். பின்பு தேவைப்பட்டால் அதனுடன் மோர் சேர்த்துக் குடிக்கவும்.
இந்தக் கஞ்சியைத் தாய்ப் பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

சிலர் வெள்ளைப்பூண்டை எண்ணெய்யில் வதக்கிச் சாப்பிடுவார்கள். அது தேவையற்றது. வெள்ளைப்பூண்டைத் தண்ணீரில் பாலில் வேக வைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

You'r reading பூண்டு: டான்சிலிட்டிஸை போக்கும் ஆண்மையை அதிகரிக்கும் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை