குளிரினால் இருமல் வருகிறதா? இவற்றை செய்தால் நின்று விடும்

by SAM ASIR, Nov 30, 2020, 19:40 PM IST

இருமல் வந்தால் உடல் சரியில்லையென்றுதான் நினைக்கிறோம். ஆனால், உடலின் காற்று குழாய்களில் மாசு புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவதற்காகவே இருமல் வருகிறது. வெளியே இருந்து உள்ளே சென்ற பொருள் தொண்டையை விட்டு வெளியே சென்றுவிட்டால் இருமல் நின்றுவிடும். ஆனால், தொடர் இருமல், மிகப்பெரிய தொந்தரவாக மாறிவிடும். இரவு முழுவதும் விழித்திருக்க வைக்கும். ஒத்துக்கொள்ளாத பொருள்கள், மாசு, தூசி, புகை ஆகியவை குளிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். தொண்டையினுள்ளே சுரண்டுவதுபோன்ற உணர்வு, வலி ஏற்பட்டால் இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே அதை சரி செய்யலாம். மருத்துவரிடம் செல்லாமல் நாமாக மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும் இது சிறந்தது.

தேன்
சளி, இருமலுக்கு தேன் நல்ல மருந்து என்பது அனுபவ மருத்துவமாக நம் முன்னோர் கூறுவதாகும். ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) கொண்ட தேன், நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படக்கூடியது. உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் ஆற்றல் தேனுக்கு இருப்பதால் தொண்டை புண்ணை குணப்படுத்துகிறது. எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரில் அல்லது மூலிகை டீயில் 2 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் இருவேளை அருந்தினால் இருமல் குணமாகும்.

உப்பு நீர்
ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கால் தேக்கரண்டி அளவு உப்பை கரைத்து அது வாயினுள் நன்றாக படும்படி கொப்பளித்தால் தொண்டை வலி குறைந்து, இருமல் மறையும். ஒரு நாளில் இப்படி பலமுறை செய்யலாம். நுரையீரல் மற்றும் மூக்குப் பாதையில் படிந்திருக்கும் கோழையை இது வெளியேற்றும். சிறுபிள்ளைகள் உப்புநீரை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இஞ்சி
காற்றுக் குழாய்களின் சவ்வுகளை தளர்த்தக்கூடிய குணம் இஞ்சிக்கு உள்ளது. ஆகவே இருமலை அது குறைக்கும். இஞ்சி டீ பருகினால் அல்லது இஞ்சி சாற்றோடு தேன் மற்றும் கறுப்பு மிளகு பொடி கலந்து குடித்தால் இருமல் நிற்கும். அளவுக்கு அதிகமாக இஞ்சி சேர்த்தால் வயிற்றுப் பிரச்னை மற்றும் நெஞ்செரிச்சல் வரக்கூடும். ஆகவே, சிறிதளவு சேர்க்கவும்.

புதினா டீ
தொண்டை பகுதியிலுள்ள நரம்பு முனைகளை மரத்துப்போகச் செய்யும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. ஒருநாளில் 2 அல்லது 3 முறை புதினா டீ அருந்தினால் இருமல் சரியாகும்.

யூகலிப்டஸ் தைலம்
யூகலிப்டஸ் தைலம் என்னும் எண்ணெய் சுவாச பாதையை குணமாக்கும். தேங்காயெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் யூகலிப்டஸ் தைலத்தை கலந்து மார்பு மற்றும் தொண்டையின் வெளியே தடவலாம். வெந்நீரில் யூகலிப்டஸ் தைலத்தை ஊற்றி ஆவி பிடிக்கலாம்.

You'r reading குளிரினால் இருமல் வருகிறதா? இவற்றை செய்தால் நின்று விடும் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை