வாக்கு மாறி விழுகிறது! மாஜி டி.ஜி.பி குற்றச்சாட்டு!!
Didnt complain of VVPAT mismatch fearing jail: Ex-DGP
‘நான் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகாமல் வேறொரு சின்னத்தை ஒப்புகைச் சீட்டு காட்டியது. இதைப் பற்றி புகார் கொடுக்கலாம் என்றால் ஆறு மாதம் ஜெயில் என்று பயமுறுத்துகிறார்கள்’’ என முன்னாள் டி.ஜி.பி. ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அசாம் மாநில முன்னாள் டி.ஜி.பி. ஹரே கிருஷ்ண டேக்கா, லச்சித்நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வந்தவுடன், ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் கோளாறு என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், ‘‘நான் யாருக்கு வாக்களித்தேனோ, அந்த வேட்பாளர் மற்றும் அவரது சின்னம் ஒப்புகைச்சீட்டு எந்திரத்தில் தெரியவில்லை. மாறாக, வேறொருவரின் பெயர் மற்றும் சின்னம் தெரிந்தது.
இதை வாக்குச்சாவடி அலுவலரிடம் கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் வாக்களித்ததை சரிபார்க்க வேண்டுமெனில் 2 ரூபாய் கட்டணம் செலுத்துங்கள். ஆனால், நீங்கள் சொன்ன புகார் பொய் என்று தெரிந்தால் உங்களுக்கு 6 மாதம் ஜெயில்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். வாக்காளருக்கு ஜெயில், அபராதம் என்றால் எப்படி துணிச்சலாக புகார் சொல்வார்கள்? அதனால்தான், நானும் புகார் கொடுக்காமலேயே வந்து விட்டேன்’’ என்று தெரிவித்தார்.
இது பற்றி அசாம் மாநில தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘முன்னாள் டி.ஜி.பி. சொல்வது உண்மை என்றால் முறைப்படி அவர் புகார் கொடுத்தால்தான் சரிபார்க்க முடியும். எந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை’’ என்றார்.
ஏற்கனவே கேரளாவில் பிபின்பாபு என்பவர், இதே போல் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் தவறாக வாக்கு பதிவானதாக புகார் கொடுத்தார். ஆனால், அதை சரிபார்த்த போது அவர் சொன்ன புகார் பொய்யானது என்று கூறி அவருக்கு இ.பி.கோ. பிரிவு 177ன் கீழ் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதையெல்லாம் பார்க்கும் போது ஒப்புகைச்சீட்டு எந்திரம் வந்த பின்பும் மக்களுக்கு வாக்கு எந்திரம் மீது முழு நம்பிக்கை ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
You'r reading வாக்கு மாறி விழுகிறது! மாஜி டி.ஜி.பி குற்றச்சாட்டு!! Originally posted on The Subeditor Tamil
More Politics News