முஸ்லிம் இந்தியாவில் இருக்கக்கூடாது நாட்டை பிரித்துவிடுவார்கள் - பாஜக எம்.பி. ஆவேசம்

இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது அவர்கள் இங்கிருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் நாட்டை பிரித்து விடுவார்கள் என்று பாஜக எம்.பி. வினய் கட்டியார் தெரிவித்துள்ளார்.

Feb 9, 2018, 14:27 PM IST

இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது; அவர்கள் இங்கிருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் நாட்டை பிரித்து விடுவார்கள் என்று பாஜக எம்.பி. வினய் கட்டியார் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய மஜ்லிஸ் இதேஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாடுதீன் ஒவைசி, செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் “இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை ‘பாகிஸ்தானியர்கள்’ என யாரேனும் அழைத்தால், அவர்களைக் கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடத்தில் பேசியுள்ள வினய் கட்டியார், “இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கி இருக்கக் கூடாது; அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு இருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் நாட்டை பிரித்துவிடுவார்கள்; இந்தியாவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்குதான் இடம் (பாகிஸ்தான், வங்கதேசம்) கொடுக்கப்பட்டு விட்டதே” என்று கட்டியார் கூறியுள்ளார்.

மேலும், “வந்தே மாதரம் பாடலுக்கு யாரெல்லாம் மதிப்பு அளிக்காமல் இருக்கிறார்களோ?, தேசியக் கொடியை மதிக்காமல் இருக்கிறார்களோ?, யாரெல்லாம் பாகிஸ்தானின் கொடியை கையில் வைத்து இருக்கிறார்களோ? அவர்களை தண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading முஸ்லிம் இந்தியாவில் இருக்கக்கூடாது நாட்டை பிரித்துவிடுவார்கள் - பாஜக எம்.பி. ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை