ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் பொய் சொன்னோம்!-திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் பொய் சொன்னதாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை மாவட்ட மேற்கு தொகுதி அ.தி.மு.க சார்பில், அறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பழங்காநந்தத்தில் நேற்று இரவு நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது, மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஆட்சியை மு.க.ஸ்டாலின் எப்படியாவது கலைத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுகிறார். அவருடன் டி.டி.வி.தினகரனும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்த துடிக்கிறார்கள். இதற்காக சிங்கப்பூரில் வைத்து ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அம்மா மரணம் அடைந்த அன்று இரவோடு இரவாக புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் தற்காலிக முதல்- அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, 33 ஆண்டுகள் அம்மாவுக்கு உதவியாக இருந்த சசிகலாவை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க நாங்கள் சொன்னோம். அவரும் பொதுச்செயலாளர் ஆனார். நான் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் சசிகலாவை ஏற்றுக்கொண்டது உண்மை தான். மறுக்கவில்லை.

அதன் பிறகு ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டது. கட்சி விதிப்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அசாதாரண சூழ்நிலையில் சசிகலா பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு சசிகலாவை முதல்-அமைச்சராகவும் தேர்வு செய்தோம். அவர் சிறைக்குச் செல்ல,  துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை சசிகலா நியமித்தார். அப்போதெல்லாம் அவர்களுடன்தான் நாங்கள் இருந்தோம். அதை மறுக்கவில்லை. அன்றைய நிலை அப்படி. அதனால்தான் அப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்க நேரிட்டது.

தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி டீக்கடைகள் என்று பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அனைவருமே ஒரு கொலைகார குடும்பத்தில் ஆட்சியையும், கட்சியையும் ஒப்படைத்து விட்டார்களே என்று பேசினார்கள். புரட்சித்தலைவி என்ற அந்த தெய்வத்தை நோய்க்கு மருந்து கொடுக்காமல் கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அய்யா, உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள்  நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம். ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்கவில்லை. இதுதான் உண்மை.அவர் பார்த்தார். இவர் பார்த்தார் என்று செய்தி சொல்வதெல்லாம் பொய். ஏன் என்று கேளுங்கள். அம்மா அப்பாவுக்குள் வீட்டில் சண்டை வரும். அக்கா-தங்கைகளுக்குள் சில நேரம் வீட்டில் சண்டை வரும். பல பிரச்சனைகள் வரும். பக்கத்து வீட்டுக்கு தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக பேசிக் கொள்வோம்.

ஜெயலலிதா மரணம்

அந்த மாதிரி இது நம்முடைய கட்சியின் ரகசியம். வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உண்மை.அன்றைக்கு அப்படி பேசினீர்களே. இது வடிவேலு பட காமெடி மாதிரி, அது வேற வாய் இது நாற வாய் என்பது போல் இல்லை. உண்மையை சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் இது இன்றைய நிலை.

இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல் நிலை பற்றி பொய் சொன்னோம்.பிரதமர் நரேந்திர மோடி வர வேண்டும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வருகிறார். எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்று சொல்லி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா வந்தார்கள்.

அதே போல் வெங்கையா நாயுடுவும் வந்தார். எல்லோரும் வந்தார்கள். எல்லோரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து பிரதாப் ரெட்டி அறையில் அமர்கிறார்கள். நாங்கள் அவர்களை சுற்றி உட்கார்ந்து கொண்டு அம்மா நன்றாக இருக்கிறார்கள் என்கிறோம்.ஆனால் ஜெயலலிதா இருந்த அறைக்கு சசிகலா மட்டும்தான் சென்று வந்தார். அவரது குடும்பத்தினரும் சென்று பார்த்து வருவார்கள். வேறு யாரும் பார்த்தது கிடையாது. வேறு யாராவது பார்த்தேன் என்று சொன்னால் கூட்டிட்டு வாங்க அவர்களை நாம் விசாரிக்கலாம்.

அதே போல் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ராகுல்காந்தி, தி.மு.க. செயல் தலைவர் என அனைத்து கட்சிக்காரர்களும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் மாடி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வணக்கம் சொல்லி அவர்களை அங்கேயே சேரில் உட்கார்ந்து விட வேண்டியதுதான். ஏனென்று கேட்டால் நோய்த் தொற்று பரவி விடக்கூடாது என்பார்கள்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு வீடியோவெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதை போட்டு காண்பியுங்கள். எல்லோருமே அதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். 

அம்மா இறந்ததற்கு பிறகு அம்மா இறந்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கேதான் நாங்களெல்லாம் இருக்கிறோம். கூட்டிட்டு போய் காட்டவில்லை. இறந்த பிறகு சாதாரண வார்டு பாய் 5 பேர் போய் எல்லாவற்றையும் காட்டி அதன் பிறகு சடங்குகளையெல்லாம் செய்கிறார்கள். 75 நாட்களுக்கு முன்பு காட்டியிருந்தால் எல்லா வி‌ஷயங்களையும் எல்லோரும் தெரிந்திருக்கலாம்.

இதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதை நாங்களும் அங்கீகரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை கமி‌ஷன் வைத்திருக்கிறார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.''இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தினகரன் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஜெயலலிதா பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது பதவிக்காகவே. சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர் திண்டுக்கல் சீனிவாசன். சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இன்று, சசிகலா மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறார். மாறி மாறி பேசும் அவரை நாங்கள் கிண்டல் செய்யத்தேவையில்லை. சமூக வலைதளங்களில் மக்களே கிண்டல் செய்கிறார்கள்.  நோய்தொற்று ஏற்படும் என்பதால் அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

எனினும், திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு, அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds