காங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு? நாளை செயற்குழுவில் முடிவு

Decision On Congress Chief Tomorrow, Mukul Wasnik Frontrunner: Sources

by எஸ். எம். கணபதி, Aug 9, 2019, 21:54 PM IST

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. இதில் கட்சியின் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.


அதன்பிறகு, தேர்தலின் போது மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் உள்பட பலரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், யாருமே சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். அதே போல், பா.ஜ.க.வை எதிர்த்து தான் தனி ஆளாக நின்று போராட வேண்டியதாயிற்று என்றும் குறிப்பிட்டார். தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.


இதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் உள்பட பலரும் ராகுலிடம் முடிவை மாற்றிக் கொள்ள வலியுறுத்தினர். தொடர்ந்து, காங்கிரஸ் முதலமைச்சர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கடந்த 2ம் தேதியன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பதவி விலகல் முடிவை கைவிட்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால், ராகுல்காந்தி அசைந்து கொடுக்கவே இல்லை.


இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘நான் காங்கிரஸ் செயற்குழுவில் எனது ராஜினாமாவை கூறி, கடிதம் அளித்து விட்டேன். செயற்குழு விரைவில் கூடி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பணியில் நான் எந்தவிதத்திலும் ஈடுபட மாட்டேன்’’ என்று கூறினார்.


இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் யார் என்று தெரியாமலேயே 2 மாதங்கள் ஓடி விட்டன. இந்நிலையில், கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பெரும்பாலும் முகுல்வாஸ்னிக் புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. சோனியா காந்தி வீட்டில் கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.


நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படா விட்டாலும் சோனியாவின் கைப்பாவையாகவே முகுல்வாஸ்னிக் இருப்பார் என்று இப்போதே கதர்ச்சட்டைக்காரர்கள் புலம்பத் தொடங்கி விட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பிரதிநிதியாகவும், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் இருந்த முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரசாருக்கு மிகவும் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading காங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு? நாளை செயற்குழுவில் முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை