தெலங்கானாவில் தாமரை மலருமா? தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

Will lotus bloom in Telangana? tamilisai answered

by எஸ். எம். கணபதி, Sep 2, 2019, 13:55 PM IST

தெலங்கானாவில் தாமரை மலருமா என்ற கேள்விக்கு தமிழிசை என்ன பதில் சொல்லியிருப்பார்?

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்திராஜன், உண்மையிலேயே தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அடிவயிற்றில் இருந்து ஓங்கி ஒலித்த குரல், வைரலாக பரவியது மட்டுமல்ல. அதை வைத்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் கூட வந்தன. ஆனால், எதையும் ஸ்போர்ட்டிவ்வா எடுத்து கொள்ளும் தமிழிசை, அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் பணியாற்றினார். தூத்துக்குடியில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும், துணிவுடன் களம் கண்டவர். இதற்கு பிரதிபலனாக தற்போது அவருக்கு தெலங்கானா கவர்னர் பதவியை பிரதமர் மோடி அரசு அளித்துள்ளது.

இந்நிலையில், அவர் இந்து பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற குரல் கொடுத்தீர்கள், இப்போது தெலங்கானாவில் தாமரை மலருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலர்ந்தே தீரும். தெலங்கானாவில் ஏற்கனவே பாஜக வளரத் தொடங்கி விட்டது. நான் இப்போது கவர்னராகி விட்டதால் அரசியல் பேசக் கூடாது. நான் இந்த பதவியைக் கொண்டு தெலங்கானா மக்களுக்கான நலத் திட்டங்களில் சிறந்த பணியாற்ற முடியும். நான் எந்த உயர்ந்த பதவியை எட்டினாலும் எளிமையையும், அணுகுமுறையையும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நான் ஒரு திருமண விழாவுக்கு புறப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது கட்சித் தலைவர் என்னை தொடர்பு கொண்டு, எனது முழுப்பெயர் மற்றும் இதர விவரங்களை கேட்டார். அப்போதே எனக்கு ஒரு பதவி தரப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவர் என்னிடம் பேசும்போதுதான் கவர்னர் பதவி தரப்படுவதை அறிந்தேன். இந்தப் பதவியை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது தந்தை காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அவரது மகளான நான் பாஜகவில் சேர்ந்ததால், எனது உறவினர்கள் பலரும் என்னிடம் பேசுவதே இல்லை.

அவர்கள் கூட இன்று எனக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். நான் ஓரிரு நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாநிலம் முழுவதும் சுற்றி பணியாற்றினேன். எனது பணியை மெச்சும் வகையில் இந்தப் பதவி தரப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

You'r reading தெலங்கானாவில் தாமரை மலருமா? தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை