மோடி - ஜின்பிங் சந்திப்பு புதிய சகாப்தம் படைக்குமா?

will modi-jinping mammallapuram meet give india benefits?

by எஸ். எம். கணபதி, Oct 13, 2019, 10:16 AM IST

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரம் சந்திப்பின் மூலம் இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகளில் புதிய அத்தியாயம் துவங்கும் என்று மோடி கூறியுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்க் 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். சென்னைக்கு நேரடியாக அந்நாட்டு விசேஷ விமானத்தில் வந்திறங்கிய ஜின்பிங், கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து மாமல்லபுரம் சென்றார். அங்கு பிரதமர் மோடியும், அவரும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்கள் பல்லவர் கால சிற்பங்கள், ஐந்து ரதம், கடற்கரைக் கோவில் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பின்னர், இருதரப்பு பேச்சுவர்த்தை நடைபெற்றது. இருவரும் தனியாக பல மணி நேரம் பேசினாலும், இருநாட்டு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக, வர்த்தக-பொருளாதார பிரச்னைகளை தீர்ப்பதற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சீன துணை அதிபர் ஹு சுன்ஹுவா ஆகியோரும் இடம்பெற்றிருப்பார்கள் என்று நமது வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்திருக்கிறார்.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் வர்த்தகத்தை விட, இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் வர்த்தகம் குறைவு.

இதைத்தான் வர்த்தகப் பற்றாக்குறை என்கிறோம். தற்போது சீனாவுடன் நமது வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 55 பில்லியன்(5500 கோடி) டாலராக உள்ளது. இதை குறைப்பதற்காக இந்தியா பல முறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு நாம் புதிய பொருட்களின் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும். அந்த பொருட்களுக்கு சீனா அனுமதிக்க வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் சீனா நாம் இழுத்த இழுப்புக்கு வருவதே இந்தியா அந்நாட்டுக்கு மிகப் பெரிய சந்தையாக இருப்பதுதான். காரணம், சீன தயாரிப்பு என்றாலே குறைந்த விலைக்கு கிடைக்கும் என்பதால், நம் மக்கள் ஆர்வமுடன் வாங்குவதுதான்.

குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக், செராமிக், பர்னிச்சர் என்று பல பொருட்களை சொல்லலாம். கடைசியாக சீனப் பட்டாசுகள் கூட வந்து, நமது தொழில்நகரமான சிவகாசியின் சிறப்பை சிதைத்து கொண்டிருக்கிறது. சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் கடும் போராட்டங்களை சந்தித்து, சீனப் பட்டாசு இறக்குமதிக்கு மத்திய அரசின் தடையுத்தரவை பெற்றிருக்கிறோம். ஆனாலும், வேறொரு பொருட்களின் போர்வையில் அந்த பட்டாசு இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. அதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கிறது என்று சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த சிக்கல்களை நாம் எதிர்கொண்டிருக்கும் சூழலில், பிராந்திய விரிவான பொருளாதார பங்குதாரர்கள்(ரீஜினல் காம்பரகென்சிவ் எகனாமிக் பார்ட்னர்ஷிப்) என்ற பெயரில் ஒரு ஒப்பந்தம் தயாராகி வருகிறது. இதில், இந்தியா, சீனா, புரூணை, கம்போடியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்பட 16 நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து வருகிறது.

காரணம், இதன்மூலம் இந்தியாவுக்குள் சீனாவின் மலிவு விலை பொருட்கள் ஏராளமாக வரத் தொடங்கி விடும். விவசாயம், தகவல்தொழில்நுட்பம், மருத்துவம் என்ற பல துறைகளில் சீனா பொருட்கள் ஊடுருவினால், இந்தியாவின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். அது பொருளாதார ரீதியாகவும் இந்தியாவை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், அந்த ஆர்.இ.சி.பி. ஒப்பந்தத்தில் இணையுமாறு இந்தியாவை சீனா கட்டாயப்படுத்தி வருகிறது. இது போன்ற சாதகங்களை எதிர்பார்த்துதான், பிரதமர் மோடி அழைத்தவுடன் முறைசாரா சந்திப்புக்கு சீன அதிபர் ஓடி வருகிறார்.

சீனாவின் மலிவு விலை பொருட்கள் அதிகமாக வரத் தொடங்கினால், உள்நாட்டு உற்பத்தி, தயாரிப்புகள் பாதிக்கும் என்பதால்தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே, சீனப் பொருட்களை வாங்காதீர்கள், சுதேசிப் பொருட்களை வாங்குங்கள் என்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இப்படியிருக்க, ஏன் ஜின்பிங்கை பிரதமர் மோடி அழைத்தார் என்ற நியாயமான கேள்வி எழலாம். அதற்கு காரணம், அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு எப்படியாவது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னை ஆக்க வேண்டுமென பாகிஸ்தான் துடிக்கிறது. ஆனால், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சவுதி அரேபியா உள்பட வளைகுடா நாடுகளின் அதிபர்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் நட்பு பாராட்டுவதன் மூலம், அந்நாடுகளை பாகிஸ்தானுக்கு ஆதரவாக திரும்பி விடாமல் தடுத்துள்ளார். காஷ்மீர் விஷயத்தில் தங்களுக்கு ஆதரவாக 54 நாடுகள் உள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியது.

ஆனால், அந்த நாடுகள் பட்டியலை அதனால் வெளியிடவே முடியவில்லை. காரணம், ஒன்றிரண்டு நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் அனைத்துமே காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்விவகாரம் என்று ஒதுங்கியுள்ளன.

இந்த வகையில்தான், மோடி - ஜின்பிங்க் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையே எந்த பிரச்னையையும் சிக்கலாக்கக் கூடாது என்று இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அமைதி, சுமுக உறவு என்பது மேலும் வலுப்பட்டிருக்கிறது. எனவே, இது இந்தியாவுக்கு வருங்காலத்தில் சீனாவுடன் வர்த்தகம் மட்டுமின்றி அனைத்து வகைகளிலும் பலனை தரலாம் என்று நம்பலாம். அந்த வகையில் இது புதிய அத்தியாயம் படைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

You'r reading மோடி - ஜின்பிங் சந்திப்பு புதிய சகாப்தம் படைக்குமா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை