சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

Supreme Court to pronounce judgement tomorrow on review petitions in sabarimala case.

by எஸ். எம். கணபதி, Nov 13, 2019, 12:33 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு கூறுகிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், அவர் தலைமையிலான அமர்வுகள் விசாரித்த வழக்குகளில் வரிசையாக தீர்ப்பு கூறப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் சபரிமலை வழக்கிலும் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரி மனுக்கள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு கடைசியாக சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, இந்த சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

அதில், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனி தீர்ப்பு கூறினார். மற்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். அதாவது, கேரள இந்து பொது வழிபாடு(அனுமதி) விதிகள்-1965ல் பெண்களுக்கு அனுமதி மறுக்கும் பிரிவு 3(பி)- ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர். இது அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று குறிப்பிட்டனர்.

அதே சமயம், நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில், அந்த சட்டப்பிரிவு செல்லும் என்று உத்தரவிட்டார். மேலும், அடிப்படை உரிமை என்ற பெயரில் மதநம்பிக்கைகளில் குறுக்கீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று அவர் தீர்ப்பில் குறிப்பிட்டார். மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் நாளை(நவ.14) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை