பட்நாவிசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் கடிதம்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்..

Supreme Court directed the Union government to submit Fadnavis letter claiming mlas support

by எஸ். எம். கணபதி, Nov 25, 2019, 09:25 AM IST

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தனக்கு மெஜாரிட்டி உள்ளதாக குறிப்பிட்ட கடிதத்தையும், கவர்னர் அவரை பதவியேற்க அழைத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இன்று அவை தாக்கல் செய்யப்படுகிறது.

மகாராஷ்டிர அரசியலில் நவ.23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் அதிகாலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதனால், அன்று அதிகாலை முதல் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. சிவசேனா தலைமையில் என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என்றும் சரத்பவார் அதற்கு முதல்நாள்தான் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஆனால், நள்ளிரவில் எல்லாமே மாறி விட்டது. நவ.24 அதிகாலை 5.45 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றனர். விடிவதற்குள் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது.
இந்நிலையில், கவர்னரின் செயலை எதிர்த்து சிவசேனா, என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஞாயிறன்று(நவ.24) அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ்கன்னா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். பாஜக சார்பில் சீனியர் வழக்கறிஞர் முகுல்ரோகத்கி ஆஜராகி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361-ன் கீழ் கவர்னருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அதனால், கவர்னரை கேள்வி கேட்கக் கூடாது என்று வாதிட்டார்.

சிவசனோ, என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி சார்பில் சீனியர் வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடினர். கவர்னரின் செயல் அத்துமீறியதாக உள்ளது. அதிகாலை 2.30 மணிக்கு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவசர, அவசரமாக பட்நாவிஸ் பதவியேற்றுள்ளார். நீதிபதிகள், அரசியல்தலைவர்கள், மீடியா என்று யாருக்குமே முறையாக அழைப்பு விடாமல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? மேலும், என்.சி.பி. கட்சியின் 45 எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாரிடம்தான் உள்ளனர். பாஜகவுக்கு ஆதரவாக அவர்களின் கையெழுத்து போலியாக போடப்பட்டு, கவர்னரிடம் கடிதம் தரப்பட்டிருக்கிறது. அதனால், பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அல்லது பட்நாவிஸ் அரசை இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், குதிரைப்பேரத்திற்கு வழி வகுத்து விடும் என்று வாதாடினர்.

இதையடுத்து, தனக்கு மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக முதலமைச்சர் பட்நாவிஸ் கொடுத்த ஆதரவு கடிதத்தையும், கவர்னர் அவருக்கு பதவியேற்க விடுத்த அழைப்பு கடிதத்தையும் இன்று(நவ.25) தாக்கல் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்த பரபரப்பான வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

You'r reading பட்நாவிசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் கடிதம்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை