மாணவர்களை கொச்சைப்படுத்திய ரஜினி மன்னிப்பு கோர முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..

by எஸ். எம். கணபதி, Dec 20, 2019, 13:43 PM IST

மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம்லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது இந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்து வன்முறை வெடித்தது. தற்போது தென்மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் பரவியுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, அசாம், தமிழகம் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் மாணவர்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தின் போது பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் காவல்துறையினரே வாகனங்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பது போன்றுள்ளது.

மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசின் போக்கை கண்டித்து தேச பாதுகாப்பு, நாட்டு நலன் ஆகியவற்றை மனதில் வைத்து மாணவர்களும் மற்றவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால், ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டிக்காமல், இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் என கூறி மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த், தற்போது மாணவர்கள் தங்களாவே முன் வந்து மத்திய அரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில், போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக வன்முறை, கலவரத்தால் தீர்வு ஏற்படாது என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

மக்கள் ஒற்றுமையுடன் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதை, வன்முறை மனத்திற்கு வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவிக்கிறார் என தெரியவில்லை.
காவி சாயம் பூச முடியாது என ரஜினிகாந்த் கூறி வந்தாலும், பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது போல பிஜேபியின் கைப்பாவை என்பதை அடிக்கடி தனது கருத்துகளின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தி வருகிறார்.
மாணவர்கள் மற்றும் மக்களின் நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு, நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, அவரது கருத்து திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.

You'r reading மாணவர்களை கொச்சைப்படுத்திய ரஜினி மன்னிப்பு கோர முஸ்லிம் லீக் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை