விவசாயிகளுக்கு தனி ரயில்.. மத்திய பட்ஜெட்டில் தகவல்
விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. மத்திய அரசின் 2020 -2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் அவர் கூறியதாவது:
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாதிரி விவசாயச் சட்டங்களை மாநிலங்களும் நிறைவேற்ற வேண்டும். 15 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய மின்சார முனையத்தில் இருந்து பம்புசெட் இணைப்புகள் வழங்கப்படும்.
கிஷான் ரயில் என்று விவசாயிகளின் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு தனியாக ரயில் விடப்படும். இதன்மூலம், அழுகும் பொருட்களை உடனடியாக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும்.
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும்.
2025ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயத்துறைக்கு ரூ.2.83 கோடி லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
You'r reading விவசாயிகளுக்கு தனி ரயில்.. மத்திய பட்ஜெட்டில் தகவல் Originally posted on The Subeditor Tamil
More India News