சென்னை-பெங்களூர் வர்த்தக வழித்தடம்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Feb 1, 2020, 17:37 PM IST

சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. மத்திய அரசின் 2020 -2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் அவர் கூறியதாவது:
கல்வித் துறைக்கு இந்த ஆண்டு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்தியாவின் உயர்கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆசியா, ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் ஐஎன்டி-எஸ்ஏடி என்ற திறனறிவு தேர்வு நடத்தப்படும். பட்டப்படிப்பு வரை ஆன்லைனில் படிக்கும் வகையில் புதிய கல்வித் திட்டங்கள் நூறு கல்வி நிறுவனங்களின் மூலம் தொடங்கப்படும்.

வரும் 2030ம் ஆண்டில் உலகிலேயே வேலை பார்க்கும் வயதை உடையவர்கள் அதிகமாக உள்ள நாடாக இந்தியா இருக்கும்.

தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு 27 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

ரயில்வே வழித்தடங்களில் அதிக அளவு சூரியமின்சக்தி பயன்டுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் 6 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி-மும்பை விரைவுச் சாலை உள்பட 3 விரைவுச் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஏற்றுமதியாளர்கள் பலன் பெறும் வகையில் குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

You'r reading சென்னை-பெங்களூர் வர்த்தக வழித்தடம்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை