அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவிக்கு இறுதி சடங்கு! - ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

மும்பையில் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Feb 28, 2018, 16:56 PM IST

மும்பையில் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாட்டிலிருந்து தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய ஸ்ரீதேவி, ஒட்டுமொத்த இந்திய திரை வானிலும் நட்சத்திரமாக ஒளி வீசினார். ஹிந்தி படங்கள் மூலம் பாலிவுட் ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றார். பின்னர், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில், தான் தங்கியிருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஹோட்டல் அறையில், குளியல் தொட்டி நீரில் மூழ்கி, ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

ஸ்ரீதேவி இயற்கையாகவே நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது மர்மம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஸ்ரீதேவி தங்கி இருந்த ஹோட்டலுக்கு போலீசார் சென்று குளியல் அறையையும் பார்வையிட்டனர். உடைக்கப்பட்ட கதவையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், “ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது” என்று கூறி வழக்கின் விசாரணையை முடித்துக் கொள்வதாக செவ்வாய்க்கிழமை [27-02-18] அன்று துபாய் போலீஸார் அறிவித்தனர். ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தையும் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, எம்பார்மிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது. பின்னர், ஸ்ரீதேவியின்  உடல் மும்பையில் உள்ள செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.

ஸ்ரீதேவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாடு முழுவதிலுமிருந்து, முன்னணி திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள், சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மும்பைக்கு வந்துள்ளனர். ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

இடையிடையே திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மதியம் 12.30மணி வரை ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.

ஷாருக்கான், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், சுஸ்மிதா சென், வெங்கடேஷ், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, சர்தா கபூர், வித்யா பாலன், ரேகா, அஜய் தேவ்கான், கஜோல், தபு, ஜான் ஆபிரகாம், விவேக் ஓபரோய், ஜய பிராடா, அக்ஷய் கன்னா, சஞ்சய் கபூர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீதேவி உடலை தகனம் செய்ய மும்பை வில்லேபார்லி மேற்கு பகுதியில் எஸ்.வி.சாலையில் உள்ள வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யுமித்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

முன்னதாக, ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மகாராஷ்டிர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

You'r reading அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவிக்கு இறுதி சடங்கு! - ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை