அகமதாபாத் ஸ்டேடியத்தில் டிரம்ப்பை வரவேற்கக் குவியும் மக்கள்..

by எஸ். எம். கணபதி, Feb 24, 2020, 11:20 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று காலை 11.30 மணியளவில் அகமதாபாத்திற்கு வருகிறார். அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி மதியம் 1 மணிக்குச் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. அதற்காகக் காலை 9 மணி முதல் மக்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். அமெரிக்காவிலிருந்து அந்நாட்டு விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர்கள் இன்று(பிப். 24) காலை 11.30 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேருகின்றனர்.

விமான நிலையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி, அவர்களைச் சந்தித்து வரவேற்க உள்ளார். இதற்காகப் பிரதமர் மோடி இன்று காலை 9 மணியளவில் டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் அகமதாபாத்திற்குச் சென்றார். விமான நிலையத்தில் டிரம்ப் தம்பதிக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, அவர்கள் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்கிறார்கள். ஆசிரம வாயிலில் சோலா பகவத் பள்ளி உள்பட பல பள்ளிகளின் மாணவ, மாணவியர் இருநாட்டுத் தேசியக் கொடிகளை ஏந்தி வரிசையில் நின்று வரவேற்கின்றனர். பகல் 12.15 மணிக்கு ஆசிரமத்திற்கு வந்து சேரும் டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோர் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்து விட்டுப் புறப்படுகின்றனர்.

அங்கிருந்து அவர்கள் அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள, சர்தார் படேல் பெயரிடப்பட்டுள்ள மோட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு செல்கிறார்கள். அவர்களுக்கு வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பகல் 1.05 மணிக்கு ஸ்டேடியத்திற்கு செல்லும் டிரம்ப், அங்குப் பிரம்மாண்டமாக நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருடன் நமது பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்காக ஹவ்டி மோடி என்ற பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் டிரம்ப்பும் பங்கேற்றார். அதே போன்று, இப்போது நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கின்றனர்.

பாதுகாப்பு கருதி, காலை 9 மணிக்கே ஸ்டேடியத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே பாதுகாப்பு சோதனைகள் நடத்தித் தேர்வு செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு டிரம்ப்பும், மெலனியா டிரம்ப்பும் ஆக்ராவுக்கு செல்கின்றனர். மாலை 5.15 மணிக்கு அங்குச் செல்லும் அவர்கள், தாஜ்மகாலைப் பார்த்து ரசிக்கின்றனர். அதன்பின், புதுடெல்லிக்குச் சென்று இரவு அங்குத் தங்குகிறார்கள். டிரம்ப் நாளை காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் வரவேற்பில் பங்கேற்கிறார். பின்னர், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

You'r reading அகமதாபாத் ஸ்டேடியத்தில் டிரம்ப்பை வரவேற்கக் குவியும் மக்கள்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை