கொரோனா எதிரொலி.. இத்தாலியில் இருந்து 263 பேர் நாடு திரும்பினர்..

by எஸ். எம். கணபதி, Mar 22, 2020, 13:57 PM IST

இத்தாலியில் தவித்த 263 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 175க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. நேற்று(மார்ச் 21) வரை 3 லட்சத்து 8,215 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 95,824 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 13,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில்தான் உலக அளவில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், இத்தாலியிலும், மலேசியாவிலும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் இந்திய அரசு ஏதாவது விமானம் ஏற்பாடு செய்து தங்களுக்கு நாடு திரும்ப வழி செய்ய வேண்டுமெனக் கோரி வந்தனர்.

இந்நிலையில், இத்தாலியின் ரோம் நகரிலிருந்து 263 இந்தியர்கள் இன்று காலையில் பத்திரமாக விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் டெல்லியில் இறங்கியதும், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரின் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குத் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியாவில் நேற்று வரை 341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

You'r reading கொரோனா எதிரொலி.. இத்தாலியில் இருந்து 263 பேர் நாடு திரும்பினர்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை