அமிதாப் பச்சனின் `உயிர் நண்பர்.. இந்திய அரசியலின் `தலால்.. யார் இந்த `அரசியல்வாதி அமர்சிங்?!

Who is this `politician Amarsingh

by Sasitharan, Aug 2, 2020, 10:27 AM IST

அமர்சிங்.. சில ஆண்டுகள் முன்புவரை இந்தப் பெயர் இந்திய அரசியல் தவிர்க்க முடியாத பெயர். எல்லோரும் அறியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய கட்சியான சம்ஜாவடி கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பல ஆண்டுகள் அலங்கரித்தவர். இந்திய அரசியலில் தற்போது இருக்கும் சாணக்கியர்களுக்கு எல்லாம் சாணக்கியர். தனது 64 வயதில் சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரைப் பற்றி ஒரு பார்வை.

யார் இந்த அமர்சிங்?

ஒரு சின்ன சம்பவத்துடன் இதைச் சொல்ல ஆரம்பிக்கலாம். 2004ம் ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்த உற்சாகத்தில் அதற்கடுத்த மாதங்களில் சோனியா காந்தி அரசியல் தலைவர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மாநிலத் தலைவர்கள், நாடாளுமன்ற பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்யும், சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அமர்சிங்கும் கலந்துகொண்டார். அமர்சிங்குக்கு இந்த விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அழையா விருந்தாளியாகச் சென்றவருக்கு அவமானமே மிஞ்சியது. `சோனியா விருந்தில் அவமதிக்கப்பட்டார் அமர்சிங்' என்று மறுநாள் உத்தரப்பிரதேச அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்து 4 வருடங்களுக்குப் பிறகு அணுசக்தி பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸைக் கழட்டிவிட, ஆட்சியைக் காப்பாற்ற எந்த அமர்சிங்கை விருந்தில் அவமதித்தாரோ, அதே அமர்சிங்கிடம் சரணாகதி அடைந்தார் சோனியா. கோரிக்கையை ஏற்று, பரம எதிரிகளான சமாஜ்வாடியையும், காங்கிரஸையும் இணைத்து மத்திய காங்கிரஸ் ஆட்சியை தன் சாணக்கிய தனத்தினால் காப்பாற்றினார் அமர்சிங்.

இந்திய அரசியலில் தற்போது இருக்கும் சாணக்கியர்களுக்கு எல்லாம் சாணக்கியர் அவர். மற்ற அரசியல்வாதிகள் மத்தியில் `அரசியல் வித்தகன். சாணக்கியன், சகுனி, தொழிலதிபர்' எனப் பெயர்கொண்ட ஒரே நபர் அமர்சிங். உத்தரப்பிரதேசத்தின் அசாம்கர் என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த அமர்சிங். உ.பியில் பள்ளிப் படிப்பைப் படித்தவர் பெரிய இடத்துத் தொடர்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொல்கத்தாவுக்குப் படிக்கச் சென்றார். அங்கு அவர் நினைத்தது போலவே பெரிய தொடர்புகள் கிடைத்தது. அமர்சிங்குக்குக் கொல்கத்தாவில் கிடைத்த நண்பர் வீர் பகதூர் சிங். வீர் பகதூர் சிங் ஒரு அரசியல்வாதி. இதே வீர் பகதூர் சிங் பின்னாளில் உ.பி. முதல்வராக, நண்பன் என்ற ஏணியைக் கெட்டியாக பிடித்துக்கொண்டார். நண்பனைப் பின்பற்றி அரசியலில் இறங்கவில்லை அமர்சிங். தொழிலதிபர் ஆனார். அப்போதே ஒரு ரசாயனத் தொழிற்சாலைக்கு முதலாளியானார்.

தொழிலதிபர் என்ற போர்வையில் தனது அரசியல் தொடர்புகள் பெருக்கினார். இந்தக் காலகட்டங்களில் உ.பி. அரசியலில் வலுவான தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். மாநில அரசியலில் கோலோச்சிய முலாமுக்குத் தனது `நம்பிக்கை'யாக செயல்பட ஒரு ஆள் தேவைப்பட்டது. அந்த நம்பிக்கையாக உருமாறினார் அமர்சிங். முலாயமின் நடவடிக்கைகள் அனைத்திலும் அமர்சிங் இருந்தார். அந்த அளவுக்கு அந்நாளில் அவர்களின் நட்பு இருந்தது.

கிட்டத்தட்டக் கூட்டணி பேச்சு, வேட்பாளராக யாரை நிறுத்துவது என அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு சசிகலா இருந்ததுபோல முலாயமுக்கு அமர்சிங் இருந்தார். ஆனால் சசிகலாவுக்கு ஜெயலலிதா செய்யாததை அமர்சிங்குக்கு முலாயம் செய்தார். கட்சியின் பொதுச்செயலாளர், கட்சி நாடாளுமன்றக்குழு உறுப்பினர் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவிகளில் ஏற்றி அமர்சிங்கை அழகுபார்த்தார் முலாயம். ஆனால் இதே முலாயம் அமர்சிங்கைக் கட்சியை விட்டு நீக்கியது தனிக்கதை.

அமர்சிங்குக்கு நட்புகள் ஏராளம். அது சினிமாவிலும் சரி, அரசியலும் சரி, தொழிலும் சரி. காலையில் சோனியா போன்ற பெரும்தலைகளோடு சரிக்குச் சமமாக உட்கார்ந்து பேசுவார், மாலையில் தனது உற்ற நண்பர் ஜெயப்பிரதாவோடு சினிமா நிகழ்ச்சிகளில் வலம்வருவார். பாலிவுட் பிரபலங்கள் ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, சஞ்சய் தத், போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி எனப் பலரை அரசியல்வாதியாக ஆக்கிய பெருமை அமருக்கு உண்டு. பாலிவுட் சூப்பர் ஸ்டார் குடும்பமான பச்சன் குடும்பத்துக்கு மிக நெருக்கம் இந்த அமர். அதிலும் அமிதாப்பச்சன் தன் உயிர்த் தோழன் அமர்சிங் என்னும் சொல்லும் அளவுக்கு மிக நெருக்கம். அந்த அளவுக்குத் தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக்கொண்டார்.

ஆனால் விஷயம் அறிந்தவர்கள் இவரை அரசியல் தரகர் என்றே கூறுவர். ஒருமுறை அத்வானி அமர்சிங்கை நேரடியாகவே 'தலால்' என்று கோபமாக சொன்னார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (தலால் என்றால் இந்தியில் தரகர் என்று அர்த்தம்). ஆம், இந்த தலால் தனது தொடர்புகளால் இந்திய அரசியலைப் பல முறை மாற்றித் தீர்மானித்திருக்கிறார். கிட்டத்தட்ட 15 வருடமாக மிக நெருக்கமாக இருந்த முலாயம்சிங் - அமர்சிங் நட்பு 2010ல் முடிவுக்கு வந்தது. கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணமாக இருந்தார் என்றுக் கூறி அமர்சிங்கை நீக்கினார் முலாயம். ஆனால் முலாயம் கட்சி மட்டுமல்ல, அவர் குடும்பம் பிரிவதற்கே காரணம் அமர்சிங் தான் என்று இப்போதும் பேசப்படுவதுண்டு. கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னதாகவே அதற்கு முன்னதாகவே உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சிப் பதவிகளைத் துறந்தார் அமர்சிங். கிட்னி கோளாறு காரணமாகக் கடந்த சில வருடங்களாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமர்சிங் இன்று மரணமடைந்துள்ளார்.

RIP அமர்சிங்!

You'r reading அமிதாப் பச்சனின் `உயிர் நண்பர்.. இந்திய அரசியலின் `தலால்.. யார் இந்த `அரசியல்வாதி அமர்சிங்?! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை