உபியில் தொடரும் கொடூரம்.. 8 வயது சிறுமி பலாத்காரம்..!

20 year old allegedly rapes 8 year old neighbour in UP

by Nishanth, Oct 1, 2020, 11:23 AM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்கின்றன. 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று 8 வயது சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக மாறி வருகிறது. பச்சிளம் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் பலாத்காரம் செய்து பின்னர் கொடூரமாகத் தாக்கி கொல்வது என மனதை உறைய வைக்கும் சம்பவங்கள் சமீப காலமாக இங்கு அதிகரித்து வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு உத்தரப்பிரதேசத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது தாய் மற்றும் சகோதரனுடன் புல் வெட்டச் சென்ற போது 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார்.பலாத்காரம் செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய அக்கும்பல் நாக்கையும் அறுத்தது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இளம்பெண்ணைப் பெற்றோர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் இறந்தார்.

இதன் பிறகும் கொடூரம் நிற்கவில்லை. அந்த இளம் பெண்ணின் உடலை அவரது உறவினர்களுக்குக் கூட தெரிவிக்காமல் போலீசார் உத்தரப்பிரதேசத்திற்குக் கொண்டுசென்று இரவோடு இரவாகத் தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. பலாத்காரம் செய்யப்பட்ட அந்த இளம்பெண்ணின் வீட்டினரை வெளியே விடாமல் போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். வேறு யாரும் அவர்களைச் சந்திக்க விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. லக்னோ அருகே உள்ள அசம்கர் என்ற இடத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயதான வாலிபர் குளிப்பதற்காக அந்த சிறுமியை ஆற்றுக்குக் கொண்டு சென்றுள்ளார். செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த சிறுமியை அந்த வாலிபர் கொடூரமாகப் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் அவரை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது இந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் தான் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அசம்கர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து டானிஷ் என்ற வாலிபரைக் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நடக்கும் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading உபியில் தொடரும் கொடூரம்.. 8 வயது சிறுமி பலாத்காரம்..! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை