`இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடக் கூடாது!- ரகுராம் ராஜன் கருத்து
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், `இந்தியாவின் வளர்ச்சியையும் சீனாவின் வளர்ச்சியையும் ஒப்பிடவது சரியாகாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடும் தொய்வு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிமுறை.
இவை இரண்டும் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்தியாவின் 2017-ம் ஆண்டுக்கான ஜிடிபி, 6.7 சதவீதமாக குறைந்தது. இதே காலகட்டத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி, 7.1 சதவீதமாக இருந்தது. இந்த காரணியை வைத்து சீனா, இந்தியாவைவிட அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசியுள்ள ரகுராம் ராஜன், `இந்தியாவையும் சீனாவையும் ஜிடிபி-யின் மூலம் ஒப்பிடுவது என்பது சரியாகாது. ஏனென்றால், இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஜிடிபி-யின் சராசரி என்பது 7 சதவீதமாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில் சீனாவுக்கு அப்படி சொல்ல முடியாது. மேலும் சீனா என்பது வேறு வகையான நாடு. அதை இந்தியாவுடன் ஒப்பிடக் கூடாது. நமது வளர்ச்சி நீடித்து நிற்க கூடியதாக இருக்கும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading `இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடக் கூடாது!- ரகுராம் ராஜன் கருத்து Originally posted on The Subeditor Tamil
More India News