சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா கணவரை பிரிகிறார்

by Nishanth, Jan 23, 2021, 10:42 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடிக் கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி ரெஹனா பாத்திமா தன்னுடைய லிவிங் டுகதர் கணவரை பிரிய தீர்மானித்துள்ளார்.கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹனா பாத்திமா. அடிக்கடி ஏதாவது ஒருவகையில் சர்ச்சையை கிளப்புவது இவரது வழக்கம். இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். மாடல் அழகியான இவர், ஒரு செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். கேரளாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் முத்தப் போராட்டம் நடந்த போது அதில் கலந்து கொண்டு பொது இடத்தில் பலருக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதன் பிறகு தான் இவர் கேரளாவில் பிரபலமடையத் தொடங்கினார். மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு அசுத்தம் இல்லை என்று கூறி அது தொடர்பான போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் ஐயப்ப பக்தர்கள் அணியும் உடையை ஆபாசமான முறையில் அணிந்து போட்டோ எடுத்து தன்னுடைய பேஸ்புக்கில் வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐயப்ப பக்தர்கள் மனதை புண்படுத்தியதாக கூறி இவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சபரிமலையில் இளம்பெண்களும் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து பல இளம் பெண்கள் சபரிமலை செல்ல முயன்று பக்தர்களின் கடும் எதிர்ப்பால் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர். இந்நிலையில் ரெஹனா பாத்திமாவும் இருமுடி கட்டி சபரிமலை செல்ல முயன்றார். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவராலும் சபரிமலை செல்ல முடியவில்லை. பின்னர் அவர் தன்னுடைய இருமுடிக் கட்டை சபரிமலையிலேயே வீசிவிட்டு சென்றார். அதை பரிசோதித்தபோது அதில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களும் பழங்களும் இருந்தன. இதுவும் சபரிமலை பக்தர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் ரெஹனா பாத்திமா மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் அரை நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் ரெஹனா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து வந்த புகார்கள் மற்றும் வழக்குகளால் ரெஹனா பாத்திமாவின் பிஎஸ்என்எல் வேலையும் பறிபோனது.தற்போது இவரது குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவர் மனோஜ் ஸ்ரீதர் என்பவருடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிய தீர்மானித்துள்ளனர். தங்கள் இருவரும் முறையாக திருமணம் செய்யாததால் பிரிவதில் எந்த சிரமம் இருக்காது என்று ரெஹனா பாத்திமா கூறினார். இருவரும் பிரிந்தாலும் குழந்தைகள் நலன் கருதி ஒரே வீட்டில் தான் வசிக்கப் போவதாகவும் அவர் கூறுகிறார்.

You'r reading சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா கணவரை பிரிகிறார் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை