டெல்லி செங்கோட்டை கலவர வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..

by எஸ். எம். கணபதி, Feb 10, 2021, 13:11 PM IST

டெல்லி செங்கோட்டை மீதேறி சீக்கியர் கொடியை ஏற்றி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி இக்பால்சிங்கை டெல்லி போலீசார் பஞ்சாபில் பிடித்தனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு இது வரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஜன.26ம் தேதியன்று டெல்லியில் டிராக்டர்கள் பேரணியை மிகப்பெரிய அளவில் நடத்தினர். சில இடங்களில் முன்கூட்டியே பேரணியைத் தொடங்கியதாலும், அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் டிராக்டர்கள் சென்றதாலும் பிரச்னை ஏற்பட்டது.

டெல்லி போலீசார் பேரணியை தடுத்த போது, விவசாயிகள் டிராக்டர்களால் சாலைத் தடுப்புகளை மோதி உடைத்து கொண்டு சென்றனர். மேலும், செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் ஏறி கடும் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் பஞ்சாப் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான தீப் சித்து மற்றும் சிலர் செங்கோட்டையின் கோபுரத்தில் ஏறி சீக்கியர்களின் நிஷான் சாகிப் கொடியை ஏற்றினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 44 வழக்குகள் பதிவுசெய்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான நடிகர் தீப் சித்துவைப் பற்றி தகவல் தருவோருக்கும், ஜக்ராஜ்சிங் உள்பட அவரது மேலும் 3 கூட்டாளிகளை பற்றி தகவல் தருவோருக்கும் தலா ஒரு லட்சம் வெகுமதி தரப்படும் என்று டெல்லி போலீஸ் அறிவித்தது.

மேலும், விவசாயச் சங்கத்தினர் ஜஸ்பீர்சிங், பூடாசிங், சுக்தேவ்சிங், இக்பால்சிங் உள்ளிட்டோரைப் பற்றி தகவல் தருவோருக்கும் தலா ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் தீப்சித்துவை போலீசார் பிடித்தனர். அவரை கைது செய்ததன் தொடர்ச்சியாக, பஞ்சாப்பில் மறைந்திருந்த இக்பால்சிங்கை இன்று(பிப்.10) கண்டுபிடித்து கைது செய்தனர். போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் ஏறுவதற்கும், வன்முறையில் ஈடுபடுவதற்கும் இக்பால்சிங் மற்றவர்களை தூண்டி விட்ட காட்சிகள் கேமராக்களில் பதிவாகியுள்ளது. இவரிடம் டெல்லி போலீஸ் இணைக் கமிஷனர் பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

You'r reading டெல்லி செங்கோட்டை கலவர வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை