இதை பாஜக நாடாளுமன்றத்திலும் செய்யும்: எச்சரிக்கும் யஷ்வந்த் சின்ஹா

by Rahini A, May 17, 2018, 11:34 AM IST

கர்நாடக மாநிலத்தில் தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக-வை வெளிப்படையாக விமர்சித்துள்ளார் முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா.

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.

பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். எடியூரப்பா, இன்னும் 2 வாரங்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

பெரும்பான்மைக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுகின்றனர் என்பதால், பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடும் என்று பரவலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக-வில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா, `கர்நாடகாவில் ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளியுள்ளது பாஜக. அந்தக் கட்சியில் இருந்து நான் விலகிவிட்டேன் என்பது குறித்து திருப்தி கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.

அங்கேயும் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கர்நாடகாவில் அரங்கேற்றியதை மீண்டும் செய்வார்கள். இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று எச்சரித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading இதை பாஜக நாடாளுமன்றத்திலும் செய்யும்: எச்சரிக்கும் யஷ்வந்த் சின்ஹா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை