மனைவிகளின் கொடுமையில் இருந்து கணவன்களை காக்க தனி ஆணையம்
மனைவிகள் செய்யும் கொடுமையில் இருந்து கணவன்களை காப்பதற்காக தனியாக ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
கணவன்களிடம் இருந்து பெண்களை காப்பதற்காக மாநிலந்தோறும் மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இருக்கும் சூழ்நிலையில் மனைகளிடம் இருந்து கணவன்களை காப்பதற்கு இதுவரை ஆண்களுக்கான தனி ஆணையம் என்று எதுவும் இல்லை.
இதனால், ஆண்களின் குறைகளையும் கேட்டு தீர்வு காண்பதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து ஆந்திர மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரும், தெலுங்கு தேசம் கட்டியின் மூத்த தலைவருமான நன்னபனேனி ராஜகுமாரி கூறியதாவது: நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமையைத் தீர்த்து வைக்க தனியாக ஆணையம் உள்ளது. அதேபோல ஆண்களைக் கொடுமைப்படுத்தும் மனைவிகளிடம் இருந்து அவர்களைக் காக்க தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேச இருக்கிறேன்.
ஆண்கள் மீது மனைவிகள் நிகழ்த்தும் கொடுமைக்கு அதிகரித்து வரும் டிவி சீரியல்களே காரணம் என கருதுகிறேன். தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களைப் புகுத்தி விடுகின்றன. இதுபோன்ற நாடகங்கள் பெண்களின் மனதில் ஆண்கள் குறித்த தவறான எண்ணத்தையும், சமூகத்திலும் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. சமுதாயத்துக்கு பெரிய எதிர்மறையான விளைவுகளை இந்த சீரியல்கள் ஏற்படுத்துகின்றன.
இதனால், தொலைக்காட்சி சீரியல்களில் எதிர்மறையான சிந்தனைகளைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று விதிகளைக் கொண்டு வரவேண்டும். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் பேசி உள்ளேன். ஆண்களுக்காகத் தனி ஆணையம் அமைக்க மீண்டும் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading மனைவிகளின் கொடுமையில் இருந்து கணவன்களை காக்க தனி ஆணையம் Originally posted on The Subeditor Tamil
More India News