கொச்சி விமான சேவை நாளை முதல் முழு அளவில் தொடங்குகிறது
கேரளாவில் கனமழை எதிரொலியால், மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் திறக்கப்பட்டு, நாளை முதல் விமான சேவை தொடங்குகிறது.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை எதிரொலியால், அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. அணைகள் அனைத்தும் நிரம்பியது. இதனால், உபரி நீர் திறக்கப்பட்டது.
வெள்ளக்காடான பல பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்புப் படையினர் மீட்பு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள், நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலோர மாவட்டமான கொச்சியில் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றம் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது.
இதனால், கொச்சி விமான நிலையம் கடந்த 14ம் தேதி மூடப்பட்டது. இதனால், கொச்சி வர வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் அல்லது கோழிக்கோடு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்படுகின்றன.
கொச்சி விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியாததால், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கொச்சி விமான நிலையத்தின் விமான சேவை நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணியில் இருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் முழு அளவில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
You'r reading கொச்சி விமான சேவை நாளை முதல் முழு அளவில் தொடங்குகிறது Originally posted on The Subeditor Tamil
More India News