கேரளாவில் அழிவு மழை பெய்ததால் பெருவெள்ளப் பெருக்கு உண்டாகி பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதில் 417 பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு லட்சத்து 69 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி 2,787 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அநேகர் வீடு மற்றும் உடைகளை இழந்துள்ளனர். கேரளாவில் நடைபெற்று வரும் நிவாரண மற்றும் புனரைப்பு பணிகளுக்கு பல்வேறு நிறுவனங்களும், உதாரகுணம் கொண்டவர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். கூகுள் நிறுவனமும் அதன் பணியாளர்களும் சேர்ந்து கேரளாவில் நடைபெறும் நிவாரண பணிகளுக்கு 1 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 7 கோடி ரூபாய்) வழங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய பிரிவின் துணை தலைவரான ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். இயற்கை பேரிடர்கள் மற்றும் அழிவு காலங்களில் அறிமுகமானவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவும் தொழில் நுட்பத்தையும் (person finder tool) கூகுள், கேரள வெள்ளத்தால் பிரிந்தவர்களை இணைக்க செயல்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் இதுவரை 22,000 தகவல்களை கண்டறிந்துள்ளது என்றும் ஆனந்தன் அறிவித்துள்ளார். குட் ஒர்க் கூகுள்!