மூளைக்காய்ச்சல்: காரணங்கள், விளைவு, காப்பு முறைகள்

What is encephalitis, how did 53 children die in India?

by SAM ASIR, Jun 15, 2019, 09:59 AM IST

பீகார் மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் குழந்தைகளை பலி கொள்ளும் கொடிய நோய் பற்றி செய்தி நம் உள்ளத்தை அசைக்கின்றன. 'மூளைக்காய்ச்சல்' என்று பொதுவாக கூறப்படும் மூளையழற்சி நோய் (என்கேஃபிலாய்டிஸ்) இப்பிள்ளைகளின் உயிரை காவு கொண்டுள்ளது.

கடந்த 2008 முதல் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மூளைக்காய்ச்சலால் 44,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் ஏறக்குறைய 6,000 பேர் பலியானதாகவும், 2016ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின கோராக்பூரில் மட்டும் 125 பேர் இந்நோயால் மரணமடைந்ததாகவும் முந்தைய தகவல் கூறுகிறது. பீகாரின் முசாபர்நகர் மாவட்டத்தில் 1995ம் ஆண்டு முதல் இந்நோயின் தாக்கம் இருந்து வருகிறது.

மருத்துவ துறையில் ஏஇஎஸ் என்று அழைக்கப்படும் என்கேஃபிலாய்டிஸ் இந்தியாவில் பெரும்பாலும் ஜப்பானிய என்கேஃபிலாய்டிஸ் என்ற வைரஸால் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. முதன்முதலாக 1955ம் ஆண்டு சென்னையில் இதன் தாக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரிலும் இந்நோய் தென்பட்டது.

மூளைக்காய்ச்சல்:

மூளைக்காய்ச்சல் மூளையில் ஏற்படும் அழற்சியாகும். பெரும்பாலும் இதற்கு வைரஸ் தாக்குதல் காரணமாக உள்ளது. பாக்டீரியா தொற்று மற்றும் நோய்தொற்று காரணமல்லாத பிற பிரச்னைகளும் மூளைக்காய்ச்சலுக்குக் காரணமாகலாம்.
சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு முறையான சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். நோய்த்தடுப்பு ஆற்றல் குறைந்த சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரையும் இந்நோய் தாக்கக்கூடும்.

மூளைக்காய்ச்சல் அறிகுறிகள்:

சாதாரண 'ஃப்ளூ' பாதிப்புக்குள்ள தலைவலி, காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, அசதி, பலவீனம் போன்ற அறிகுறிகளே இதற்கும் தென்படுவதால் இதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடிய அபாயம் உள்ளது. பாதிப்பு தீவிரமாகும் போது அதிக காய்ச்சல், மனக்குழப்பம், தலைசுற்றல், மாய காட்சிகள், உடல் இயக்கம் பாதிப்புறல், வலிப்பு போன்ற நடுக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

வைரஸ் பாதிப்பு:

வைரஸ் பாதிப்பினால் மூளைக்காய்ச்சல் வந்தால் பச்சிளங்குழந்தையின் மண்டையோட்டில் மிருதுவான பகுதியில் வீக்கம் தென்படும். தலைசுற்றல் மற்றும் வாந்தி, உடல் விறைத்தல், பசியின்மை மற்றும் எரிச்சலுணர்வு இருக்கும்.

காரணங்கள்:

பொதுவான வைரஸ் கிருமிகள், சிறுவயதில் தாக்கும் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களுக்கான வைரஸ்கள், கொசு, உண்ணிகள் போன்ற பூச்சிகள் போன்றவற்றின் மூலம் இந்நோய் பரவலாம்.

லிச்சி பழம் காரணமா?

1995ம் ஆண்டு முதல் முசாபர்நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இப்பாதிப்பு தொடர்ந்து காணப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 2015ம் ஆண்டு லிச்சி பழத்திற்கும் மூளைக்காய்ச்சலுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர். லிச்சி பழத்திற்குப் பெயர்பெற்ற இப்பகுதியில் லிச்சி பழம் கிடைக்கக்கூடிய கோடைக்காலத்தில் மூளைக்காய்ச்சல் வருவதோடு தொடர்புபடுத்தி இந்த ஆய்வு நோக்கு வைக்கப்பட்டது.

வங்கதேசம் மற்றும் வியட்நாம் பகுதிகளிலும் லிச்சி மரங்கள் வளரக்கூடிய இடங்களில் நரம்பியல் நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை முறை:

முதனிலை, இரண்டாம் நிலை என்று மூளைக்காய்ச்சல் வகைப்படுத்தப்படுகிறது. எவ்வகை என்று மருத்துவர்கள் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிப்பார்கள்.

தடுக்கும் முறை:

மூளைக்காய்ச்சலுக்கு கொசுக்கள், உண்ணிகள் மற்றும் பூச்சிகள் காரணமாக இருப்பதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியிடங்களுக்கு, கழிப்பறைகளுக்கு சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் கைகளை சோப்பு கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். ஒருவர் பயன்படுத்திய பாத்திரம், குவளை ஆகியவற்றை மற்றொருவர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பச்சிளங்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு அவ்வப்போது அளிக்கவேண்டிய தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும். வெளிநாடுகளுக்குப் பயணித்தால் அந்நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை மருத்துவரின் வழிகாட்டலில் போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கவனிக்கவேண்டும். கொசுக்கடியை தவிர்த்தால் பெரும்பாலும் பரவக்கூடிய எல்லா நோய்களையும் தடுக்கலாம்.

நெஞ்சு படபடப்பு: என்ன செய்வது?

You'r reading மூளைக்காய்ச்சல்: காரணங்கள், விளைவு, காப்பு முறைகள் Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை