குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்வது எப்படி?

by SAM ASIR, Dec 31, 2020, 13:01 PM IST

குளிர்காலத்தில் திடீரென வெப்பநிலை குறைவதால் இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதயத்தின் செயல்பாடு மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் காரணமாக மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் இரத்த கொதிப்பு ஆகிய பாதிப்புகள் நேரிடக்கூடும். நிலவும் குளிர் பலருக்கு இதமாக இருக்கலாம்; சிலருக்கு அது கடப்பதற்கு சிரமமான காலகட்டமாக தெரியும். குளிர் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக காப்பதற்கு இதயம் அதிகமாக உழைக்கவேண்டியதிருக்கும். அதன் காரணமாக இரத்தம் கட்டிக்கொண்டு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

குளிர்காலமும் இதய பாதிப்பும்
குளிர்காலத்தில் இரத்தநாளங்கள் குறுகுவதால் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. தொடர்ந்து இதயத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. ஆக்ஸிஜனை இரத்தத்தில் அனுப்புவதற்கு இதயம் அதிகமாக இயங்க வேண்டியுள்ளது. ஆகவே, ஏற்கனவே இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு குளிர்காலம் ஆபத்தானமாக மாறுகிறது. இரத்த அழுத்தம் உயர்ந்தாலும் குளிர்காலமாக இருக்கிறபடியால் வியர்வை வெளியாகாது. கோடைகாலத்தில் 250 முதல் 300 மில்லி லிட்டர் திரவம் உடலிலிருந்து வியர்வை மூலமாக வெளியேறும். இதன் காரணமாக இரத்த அழுத்தமும் உடலில் திரவத்தின் அளவும் சீராக பராமரிக்கப்படும். ஆனால், குளிர்காலத்தில் வியர்வை வெளியேறாததால் உப்புகள் உடலினுள் தங்கி இரத்த அழுத்தம் உயர காரணமாகின்றன. உடலின் திரவம் வெளியேறாத நிலையில் இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

என்ன செய்யலாம்?
இதய பாதிப்புள்ளவர்கள் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். வீட்டை முடிந்த அளவு வெப்பமாக வைத்துக்கொள்ள ஏற்பாடுகளை செய்யலாம். முழுக்கை சட்டை அணிந்து கைகளை மூடிக்கொள்ளலாம். கால்களுக்கு காலுறை அணிந்துகொள்ளலாம். கையுறைகள், தலையை மூடும் துணி (scarf) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

உடற்பயிற்சி செய்வோர், குளிர்காலத்தில் பயிற்சிகளை செய்யவேண்டாம். குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்தால் இதய பாதிப்பு நேரிடும் அபாயம் உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதை தவிர்க்கவேண்டும். மது உடலின் முக்கியமான உறுப்புகளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றிவிடக்கூடும்.

குளிர்காலத்தில் அவ்வப்போது இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். இதய பாதிப்புக்காக தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறவர்கள், குளிர்காலத்தில் எக்காரணம் கொண்டும் மருந்து சாப்பிடுவதை விட்டுவிடக்கூடாது.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு மற்றும் பயிர் வகைகளை சாப்பிட வேண்டும். ஆளி விதை, பசலைக் கீரை, காரட், பிரெக்கொலி போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவேண்டும். சூப் (soup) மற்றும் சூடான பானங்களை அருந்தலாம்.

You'r reading குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை