அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் எப்போது...? பிடிவாதம் பிடிக்கும் பாஜக, தேமுதிக, பாமக
Loksabha election, reasons for admk alliance seat allotment delay
அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. தோல்வி பயத்தில் அதிமுக தள்ளிவிடும் தொகுதிகளை ஏற்க பாஜகவும், தேமுதிகவும், பாமகவும் முரண்டு பிடிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் திமுக போன்றே 19 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருந்தது போலவே தொகுதிகள் ஒதுக்குவதிலும் அதிமுக கூட்டணியில் இழுபறியாகவே உள்ளது. எந்தெந்த கட்சிகளுக்கு எந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்பதை அதிமுக தலைமை அடையாளம் காட்டினாலும், சில தொகுதிகளை ஏற்க பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை பிடிவாதம் பிடிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் பிற கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகளை மோப்பம் பிடித்து திமுக அந்தத் தொகுதிகளில் போட்டியிட குறி வைத்துள்ளது. இதனால் வட சென்னையை வேண்டாம் என்கிறது தேமுதிக. பாமகவும் மத்திய சென்னையில் தயாநிதி மாறனைக் கண்டு ஓட்டம் பிடிக்கப் பார்க்கிறது. மத்திய சென்னைக்குப் பதிலாக வேறு எந்தத் தொகுதி கொடுத்தாலும் வரவாயில்லை என்கிறது பாமக .
இதே போல் பாஜகவும் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை எதிர்க்க தயங்குகிறது. இதனால் நீலகிரி வேண்டாம் என்று ராமநாதபுரத்தை கை காட்டுகிறது பாஜக. ஆனால் அதிமுக தொகுதிகளை மாற்ற முடியாது என கண்டிப்பு காட்டுகிறதாம்.
இதற்கிடையே அதிமுகவில் தற்போது சிட்டிங் எம்.பி.க்களாக உள்ள 37 பேரும் தங்கள் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதால் தொகுதிகளை இறுதி செய்வதில் அதிமுக திண்டாட்டத்தில் உள்ளதும் இழுபறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த பிறகே தொகுதி ஒதுக்கீடுப் பட்டியல் இறுதியாகும் என்று தெரிகிறது.
You'r reading அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் எப்போது...? பிடிவாதம் பிடிக்கும் பாஜக, தேமுதிக, பாமக Originally posted on The Subeditor Tamil
More Politics News