தேர்தல் ஆணையம் தோற்று விட்டதா?நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்!!

Election commission is unfair : opposition parties charges

Apr 8, 2019, 18:16 PM IST

பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஏதோ புரோக்ராம் செய்து வைத்திருப்பார்களோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு அதிகரித்து விட்டது. தேர்தல் ஆணையமே ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்று எதிர்க்கட்சிகள் குமுறத் தொடங்கியுள்ளன.

அதற்கு காரணமில்லாமல் இல்லை! டி.என்.சேஷன் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் ஆளும்கட்சிகளே அவரைக் கண்டு நடுங்கின. என்? அதற்குப் பிறகும் தமிழகத்தில் இருந்து சென்று தலைமை தேர்தல் ஆணையர்களான கோபால்சாமி, கிருஷ்ணமூர்த்தி காலங்களிலும் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்தது. ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை வைத்தன.

ஆனால், இப்போது சுனில் அரோரா மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. மீண்டும் மோடியே ஆட்சிக்கு வர வேண்டுமென எல்லோரும் விரும்புகிறார்கள் என்று ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் வெளிப்படையாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று, குடியரசு தலைவருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியது. ஆனால், அதற்கு பின் ஒரு வாரம் கடந்தும் கல்யாண்சிங் நீக்கப்படவில்லை.

அதே போல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். ஆனால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்த ரெய்டும் நடக்கவி்லலை. தமிழகத்திலும் தி.மு.க.வைச் சேர்ந்த துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் இடங்களிலும்தான் வருமான வரித் துறை சோதனைகள் நடந்துள்ளன. ‘‘அடுத்து எங்கள் வீட்டில்தான் ரெய்டு நடத்தப் போகிறார்கள், வாருங்கள் வருமான வரித் துறையினரே!’’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். அதுவும் நடக்குமோ?

அதே போல், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. ஆனால், பா.ஜ.க. கூட்டணிகள் ஆளும் இமாச்சல், உ.பி,, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் எந்த அதிகாரியையும் மாற்றவில்லை. அங்கெல்லாம் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, என்ன?

ஏன், தமிழகத்தில் பதவி நீட்டிப்பில் இருக்கும் டிஜிபி ராஜேந்திரனை மாற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் அதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவி்லலை. ரபேல் ஊழல் புத்தகத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து, தேர்தல் அதிகாரிகள் ஓடிச் சென்று புத்தகங்களை பறித்தனர். அதன்பின், தேர்தல் ஆணையம் வரை புகார்கள் சென்று, அந்த தடை நீக்கப்பட்டது.

தமிழகத்தில் ஓஷா, ரகுபதி, நரேஷ்குப்தா என்று தொடங்கி, கடைசியாக ராஜேஷ் லக்கானி வரை தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த போது எதிர்க்கட்சியினரும் அவர்களை சந்தித்து பேச முடிந்தது. ஆனால், இப்போதுள்ள தலைமை தேர்தல் அதிகாரியை அணுகவே முடியவில்லை என்று காங்கிரசைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் நேரடியாகவே தேர்தல் ஆணையரிடம் புகார் கூறியிருக்கிறார்.

டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கு குக்கர் உள்பட ஏதோ ஒரு பொதுச் சின்னம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குக்கர் சின்னம் தராமல் பரிசுப் பெட்டியை அக்கட்சிக்கு ஒதுக்கினர். ஆனால், குக்கர் சின்னத்தை டி.டி.வி. கட்சியின் வேட்பாளர்கள் பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் காமராஜூக்கு பரிசுப் பெட்டி சின்னம், அதே பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளர் காமராஜூக்கு குக்கர். இதே போல், பாப்பிரெட்டிபட்டியில் அ.ம.மு.க. வேட்பாளர் ராஜேந்திரனுக்கு பரிசுப்பெட்டி, சுயேச்சை வேட்பாளர் ராஜேந்திரனுக்கு குக்கர் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒவ்வொரு தொகுதியிலும் அ.ம.மு.க. வேட்பாளர் பெயரில் ஒருவரை சுயேச்சையாக நிறுத்தி, அவருக்கு குக்கர் சின்னத்தை கொடுத்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இதை அமைச்சர் மணிகண்டன் வெளிப்படையாகவே, ‘‘நாங்கள்தான் குக்கர் சின்னங்களை பெற வைத்திருக்கிறோம்’’ என்று பேசியிருக்கிறார். ஆனாலும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

இந்த வரிசையில் கடைசியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் அது தாமரை சின்னத்தில் விழுமாறு ஏற்பாடு செய்திருப்பார்களோ, அதற்கு தேர்தல் ஆணையமே உடந்தையாக இருக்குமோ என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால்தான், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டுகளை 50 சதவீதம் சரிபார்க்க வேண்டுமென்று 21 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.

அதாவது, நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை இயந்திரத்தில் தெரியும் ஒப்புகைச் சீட்டில் பார்க்கலாம். அந்த சீட்டுகள் இயந்திரத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். வாக்குகள் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், அந்த சீட்டுகளை எண்ணி சரிபார்க்கலாம். ஆனால், 50 சதவீத இயந்திரங்களில் சரிபார்த்தால், வாக்கு எண்ணிக்கை முடிய 6 நாட்களாகி விடும் என்று தேர்தல் ஆணையம் மறுக்கிறது. உச்ச நீதிமன்றமோ ஒரு தொகுதிக்கு 5 இயந்திரங்களில் சரிபார்க்கலாம் என்று சொல்லி விட்டது.

திட்டக்குழு, ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ என்று எல்லா பொது அமைப்புகளிலும் தலையிட்ட மோடி அரசு கடைசியில் தேர்தல் ஆணையத்தையும் நடுநிலையாக செயல்பட விடாமல் செய்து விட்டதே என்று எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.

You'r reading தேர்தல் ஆணையம் தோற்று விட்டதா?நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை