மோடி கோபித்தால் என்ன நடக்கும்? வேலூரில் ஸ்டாலின் பேச்சு

If modi gets angry, Edappadi government will fall immediately : m.k.stalin

by எஸ். எம். கணபதி, Aug 2, 2019, 09:34 AM IST

‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

வேலூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த தலைவர்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதமே நடந்திருக்க வேண்டும். இதை நிறுத்தியதற்கு பின்னணியில் ஒரு சூழ்ச்சி நடந்திருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குத்தான் அதிக வெற்றி வாய்ப்பு என்பது மத்திய பி.ஜே.பி ஆட்சி மற்றும் மாநில அ.தி.மு.க ஆட்சிக்கு முன் கூட்டியே தெரிந்து விட்டது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் தி.மு.க.விற்கு களங்கத்தை ஏற்படுத்த துரைமுருகன் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொன்னால், அது தி.மு.க.வையே பாதிக்கும் என்றெல்லாம் நினைத்து திட்டமிட்டு அந்தக் காரியத்தைச் செய்தார்கள். அதனால் தான் தேர்தல் நின்று போனது.

அவர்கள் சொன்ன பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபட்டிருந்தால் தி.மு.க என்னவாகியிருக்கும்? தி.மு.க அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்காது. தேர்தல் முடிவுகளில் புதுவை உள்ளிட்ட பகுதியையும் சேர்த்து 39 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் நம்முடைய அணி 38 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால் என்ன காரணம்? மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் அதன் முடிவு.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கே குரல் கொடுக்கும் 38 எம்.பி.க்களுடன் 39-வது எம்.பி.யாக கதிர் ஆனந்த் செல்ல வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, உங்கள் தொண்டனாக இருந்து, உங்களில் ஒருவனாக இருந்தும் பணியாற்றுவேன் என்று அவர் உறுதி கொடுத்திருக்கின்றார். அந்த உறுதிமொழியை அவர் நிச்சயம் காப்பாற்றுவார்.
முத்தலாக் என்ற ஒரு கொடுமையான மசோதாவைக் கொண்டு வந்து, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றி முடித்த நேற்று ஜனாதிபதி அதில் கையெழுத்துப் போட்டிருக்கக்கூடிய ஒரு அக்கிரமம் நடந்திருக்கிறது. அதை நாம் கடுமையாக தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இந்த முத்தலாக் மசோதா வரக்கூடாது என்றும், வந்தால் தங்கள் சமுதாயத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார். ஆனால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் இந்த மசோதாவை ஆதரித்து பேசியிருக்கின்றார்.

இவர் பேசியதும் அடுத்த நாள், அதை வாய்தவறி பேசிவிட்டார் என்று சொல்கின்றார்கள். ஏதாவது தேதியை மாற்றி பேசினால், பெயரை மாற்றி பேசினால் அதுதான் டங்க்சிலிப். ஆனால், இந்த சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து ஒரு மிகப்பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். அதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். எனவே இரட்டைவேடம் போடுகின்றது.

மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தார்கள் என்றால் இந்த சட்டம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்து விட்டார்கள். ஏன் வெளி நடப்பு செய்தார்கள் என்றால், மோடி கோபித்துக்கொள்வார். மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? இங்கு இந்த ஆட்சி இருக்காது.

எனவே வேலூரில் நடக்கக்கூடிய இந்தத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்களின் ஓட்டுக்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற நாடகம் போட்டு எதிர்த்துப் பேசி விட்டார்கள். ஆனால் மோடியை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காக ஓட்டு போடாமல் வெளியில் வந்து விட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் எப்படி இரட்டையர்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதோ, அதே போல் இதிலும் இரட்டை வேடம் போடக் கூடிய நிலை இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது.

எனவே, கதிர் ஆனந்த்துக்கு சிறப்பான வெற்றியை தேடித் தருவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சூடுபிடிக்கிறது வேலூர் தேர்தல் களம்; எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இன்று முதல் பிரச்சாரம்

You'r reading மோடி கோபித்தால் என்ன நடக்கும்? வேலூரில் ஸ்டாலின் பேச்சு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை