கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம்: சிலை திறப்பு.. பேரணி..பொதுக் கூட்டம்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான அழைப்பு

Ex cm and DMK president Karunanidhis first death anniversary tomorrow

by Nagaraj, Aug 6, 2019, 10:15 AM IST

திமுக தலைவர் மு.கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை சென்னையில் அவருடைய சிலை திறப்பு விழா , பேரணி, பொதுக் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவராகவும் இருந்த முதுபெரும் அரசியல்வாதியான மு.கருணாநிதி, 94 வயதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி, சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள, அண்ணா சிலை அருகில் இருந்து நாளை காலை 8 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு திமுக நாளேடான முரசொலி அலுவலக வளாகத்தில், கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அமர்ந்த நிலையில் எழுத்தோவியம் தீட்டுவது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

பின்னர் மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும், கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கும் கி.வீரமணி தலைமை தாங்கி தலைமை தாங்குகிறார். இந்தப் பொதுக் கூட்டத்தில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் அழைப்பு விடப்பட்டுள்ளது. விழா முடிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற கடிதம் வடிவில் தொண்டர்களுக்கு உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஆண்டு முழுவதும் நமது நினைவுகளில் நின்று, நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்டு 7-ந் தேதி தி.மு.க. தொண்டர்கள் சென்னை நோக்கித் திரண்டிட அழைக்கிறேன்! கடற்கரையில் ஓய்வெடுக்கும் தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி, பொங்கி வரும் கண்ணீருக்கு அணையிட்டு, அமைதிப்பேரணியை அனைவரும் இணைந்து நடத்திடுவோம்! இதயம் நிறைந்த இனிய தலைவரின் ஓய்விடத்தில் மலர் தூவி, நினைவுகளால் வணங்கிடுவோம். அவர் வழியில் திமுக எனும் பேரியக்கத்தைக் காத்து, இனி எதிர்கொள்ள இருக்கும் களங்கள் அனைத்திலும் வெற்றியினைக் குவித்து அவர்தம் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்; வாரீர்! என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்குரல்களை முடக்கும் பிஜேபியின் ஆதிக்கப்போக்கு; கமல் கடும் கண்டனம்

You'r reading கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம்: சிலை திறப்பு.. பேரணி..பொதுக் கூட்டம்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான அழைப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை