தனிமைச் சிறையில் மெகபூபா அடைப்பு மகள் குற்றச்சாட்டு

Mehbooba Mufti In Solitary Confinement, Not Allowed To Talk: Daughter

by எஸ். எம். கணபதி, Aug 7, 2019, 11:21 AM IST

எனது தாயாரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, ஒரு வாரத்திற்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், பிரிவு 370ஐ ரத்து செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் தொலைதொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனால், பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியான போது ஜம்மு காஷ்மீரில் அமைதியாக காட்சியளித்தது. எனினும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த மெகபூபா, உமர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத், என்டிடிவி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள ஆடியோ மெசேஜில், ‘‘எனது அம்மாவை போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அவரை ஹரி நிவாஸ் கெஸ்ட் ஹவுசில் தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர். அவரை சந்திக்க எங்கள் குடும்பத்தினரையோ கட்சி நிர்வாகிகளையோ அனுமதிக்க மறுக்கிறார்கள்.

தொலைபேசி மற்றும் செல்போன் என்று எந்த தொடர்பும் இல்லை. அம்மாவைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவி்லலை. ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான அம்மாவையும், உமர் அப்துல்லாவையும் சட்டவிரோதமாக சிறை வைத்திருக்கிறார்கள். 370வது பிரிவு நீக்கம் என்பது இவர்கள் இருவரின் பிரச்னை அல்ல. மத்திய அரசு செய்வது எல்லாம் சட்டவிரோதமானது. காஷ்மீர் மக்கள் இதை சும்மா விட மாட்டார்கள்’’ என்று கூறினார்.

இந்திய ஜனநாயகத்தில் இன்று கருப்பு தினம்; மெகபூபா முப்தி கண்டனம்

You'r reading தனிமைச் சிறையில் மெகபூபா அடைப்பு மகள் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை