எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காஷ்மீர் பயணம்.. அனுமதி இல்லை என மாநில அரசு கைவிரிப்பு பரபரப்பு

Rahul Gandhi and oppn delegation leaves for Sri Nagar, JK govt sources says no permission:

by Nagaraj, Aug 24, 2019, 12:12 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று பயணம் செல்கிறார். ஆனால் மாநிலத்தில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது.இந்நிலையில் காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் அனுமதி இல்லை என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என அதிரடி முடிவுகளை மத்திய பாஜக அரசு இம்மாத தொடக்கத்தில் எடுத்தது.இந்த முடிவுகளால் அம்மாநிலத்தில் பிரச்னை எழக்கூடாது என்பதற்காக ராணுவத்தை குவித்த மத்திய அரசு, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.அத்துடன் 144 தடை, ஊரடங்கு உத்தரவு என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மத்திய அரசின் கடும் கெடுபிடிகளால் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகுக்கு தெரியவில்லை. அங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிடப் போகிறோம் என்று காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி போன்றோர் காஷ்மீர் சென்றனர். ஆனால் அவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி மீண்டும் திருப்பி விட்டனர்.

இதனை விமர்சித்த ராகுல் காந்தி, காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது. மத்திய அரசும், ஜம்மு - காஷ்மீர் ஆளுநரும் அதனை மறைக்கின்றனர். இதனால் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், வேண்டுமானால் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தருகிறேன். தாராளமாக ராகுல் காந்தி காஷ்மீர் நிலவரத்தை பார்க்கலாம் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக ரியாக்ஷன் காட்டிய ராகுல், விமானம் எல்லாம் வேண்டாம். சுதந்திரமாக காஷ்மீர் செல்லவும், அங்குள்ள தலைவர்கள் , பொதுமக்கள், நமது படை வீரர்களை சந்திக்க அனுமதி கொடுத்தால் போதும் என்று டிவீட் செய்தார்.

இதற்கு ஆளுநரோ, ராகுல் கட்டுப்பாடுகளை விதிக்கிறார் என்று குற்றம்சாட்ட, நான் கட்டுப்பாடு எங்கே விதித்தேன்? காஷ்மீருக்கு எப்போது வரலாம் கூறுங்கள் என்று மீண்டும் டிவீட் செய்ய இருவருக்குமிடையே வார்த்தைப் போர் வலுத்தது. கடைசியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தாராளமாக வரலாம் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் பச்சைக் கொடி காட்டினார்.

இதையடுத்து இன்று ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது படேல்,இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுச் செயலாளர்களான சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுக சார்பில் திருச்சி சிவா, ராஷ்டிரிய லோக்தளம், திரிணாமுல் உள்ளிட்ட 9 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் சிறப்பு விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டனர்.

இதற்கிடையே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது காஷ்மீர் அரசு. தற்போது தான் காஷ்மீரில் மெல்ல , மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தச் சமயத்தில் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும், இதனால் அனுமதிக்க முடியாது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவர் என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்தது வெற்று பிரச்சாரம் ; ப.சிதம்பரம் சாடல்

You'r reading எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காஷ்மீர் பயணம்.. அனுமதி இல்லை என மாநில அரசு கைவிரிப்பு பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை