யானை பன்றி கதையை சொல்லி சி.வி.சண்முகத்தை விளாசி தள்ளிய ஸ்டாலின்..

by எஸ். எம். கணபதி, Feb 12, 2021, 15:36 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று(பிப்.12) காலையில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசும் போது, முதல்வர் பழனிசாமியையும், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் பிடிபிடியென பிடித்தார். காரசாரமான அவர் பேச்சு வருமாறு:என்னிடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனு கொடுக்கிறார்கள். அதைப் பார்த்ததும் ஸ்டாலினுக்கு இனி வேலையே இல்லை என்று சொல்லி, குறைதீர்க்கும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கிறாராம்.

ஒரு போன் செய்தால் போதுமாம். 4 ஆண்டுகளாக அவருக்கு ஏன் இந்த புத்தி வரவில்லை? யார் சி.எம்? ஸ்டாலினா, நீங்களா? நான் செய்த பிறகு ஒவ்வொன்றையும் செய்வதற்கு? என்னிடம் மனு கொடுப்பவர்கள் எல்லாம் மக்கள் இல்லை என்று பேசியிருக்கிறார். நீங்கள்(கூட்டத்தினரைப் பார்த்து) எல்லாம் மக்கள் இல்லையா? வானத்தில் இருந்து குதித்தவர்களா?இந்த ஆட்சியில் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது என்று பழனிசாமி சொல்கிறார்.

நீங்கள் சாதாரண கண்ணாடி கூட அணியத் தேவையில்லை. கண்களை மூடிக் கொண்டிருந்தாலே போதும். விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாகக் கட்டிய தடுப்பணை இடிந்து விழுந்த சத்தம் படார், படார் என்று காதில் விழும். நாமக்கல் அரசு கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் காதில் கேட்கும். கரூரில் புதிதாகக் கட்டிய மினிகிளினிக் இடிந்த சத்தம் படாரென காதில் கேட்கும். பெரும் ஊழலால் இப்படி அரசு கட்டிடங்கள் இடிந்த சத்தத்தைக் காதில் கேட்டே இந்த ஆட்சியின் அவலத்தை உணரலாம்.ரூ.25 கோடிக்குக் கட்டிய தடுப்பணைக்கு உண்மையில் எவ்வளவு செலவிட்டார்களோ? இடிந்து விழுந்ததும் இந்த மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குத் திருடனுக்குத் தேள் கொட்டியது போலாகி விட்டது. அணை இடியவில்லை. சுவர்தான் இடிந்தது என்கிறார். காலையில் கேட்டால் அணை என்பார். ராத்திரி கேட்டால் சுவர் என்பார். அணையைக் கட்டிக் கொண்டிருக்கும் போது இடிந்து விழுந்து விட்டதாகவும் கதை விடுகிறார். அணைக் கட்டி திறப்பு விழாவே நடந்து முடிந்துள்ளது. அவர்தான் திறந்து வைக்கிறார். அது டி.வி.யில் செய்தியாகவே வந்துள்ளது.

உங்களுக்காக(மக்கள்) அந்த செய்தியையும், அவரது அண்டப்புளுகு, ஆகாசப் புளுகையும் திரையில் போட்டு காட்டுகிறேன் பாருங்கள்..(திரையில் திறப்பு விழா மற்றும் அணை திறக்கவே இல்லை என்று அமைச்சர் அளித்த பேட்டி ஆகியவை டி.வி.யில் வந்த செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது) பார்த்தீர்களா? இப்படி ஒரு பொய்யைக் கூசாமல் சொல்லுகிறார். வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று சொல்லுவாரே, அதைப் போல் அணையே கட்டவில்லை என்று கூட சண்முகம் சொல்லுவார்.எல்லாம் தெரிந்த மேதாவி போல் நினைக்கும் சி.வி.சண்முகம் அவர்களே, உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் வகிக்கும் அமைச்சர் பதவிக்காக மரியாதையுடன் பேசுங்கள். பதவிக்கான மாண்பை காப்பாற்றுங்கள். அவர் என்னை ஒருமையில் பேசுகிறார். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

உங்கள்(சி.வி.சண்முகம்) முன்பு மைக்கை நீட்டினால் பேசுவதற்குத்தான். வாந்தி எடுக்க அல்ல. நீங்கள் என்ன பேசினாலும் நாங்க ஏன் ஒதுங்குகிறோம் தெரியுமா? ஒரு கோயில் யானையைக் குளிப்பாட்டி பொட்டு வைத்து அலங்கரித்து குருக்கள் அழைத்து வருகிறார். எதிரே ஒரு பன்றி சாக்கடையில் மூழ்கி எழுந்து வருகிறது. அதைப் பார்த்ததும் யானை ஒதுங்கி வழி விடுகிறது. உடனே பன்றி, யானைக்கு என்னைக் கண்டால் பயம் என்றதாம். யானைக்குப் பயம் இல்லை. குளித்து விட்டு சுத்தமாக வரும் நம் மீது சாக்கடையில் விழுந்த பன்றி இடித்து விடக் கூடாதே என்றுதான் ஒதுங்கியது.திமுகவுக்கு மானம் இருக்கிறதா? என்று சண்முகம் கேட்கிறார். உங்களைக் கொலை செய்ய ஆளை ஏவி விட்டாரே, ஒருவர். அவரது வீட்டில் போய் தலைவாழை இலை போட்டு விருந்து சாப்பிடும் போது உங்களுக்கு மானம் இல்லையா? ஓ.பன்னீர்செல்வத்தைக் கருங்காலி, துரோகி என்று சொல்லி விட்டு அவரது பக்கத்தில் உட்காரும் போது அந்த மானம் எங்கே போச்சு?
ஜெயலலிதா இருக்கும் போது சண்முகத்திடம் இருந்து மந்திரி பதவியையும் மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்தார்.

எதற்காக? பத்திரப்பதிவு துறையில் கொள்ளை அடித்ததுடன், அதிகாரிகளை அசிங்கமாகத் திட்டினார் என்றுதானே. நேற்று கூட ஏதோ பேசியிருக்கிறார் (டி.டி.வி.தினகரனை திட்டியது) வாட்ஸ் அப்பில் வந்து கொண்டிருக்கிறது. இந்த கதை எல்லாம் விழுப்புரம் மாவட்டத்து மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கே தெரியும். மொத்தத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஒரு உதவாக்கரை.. அமைச்சர்கள் உளறுவார்கள்..
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

You'r reading யானை பன்றி கதையை சொல்லி சி.வி.சண்முகத்தை விளாசி தள்ளிய ஸ்டாலின்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை