நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக சொல்லவில்லை- பியூஸ் கோயல் அறிவிப்பால் அதிமுக அதிர்ச்சி!

Admk Is Not Opposing Neet Entrance Examination Says Piyush Goyal

Apr 13, 2019, 10:41 AM IST

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடல், உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளும் முக்கியமான பேசு பொருள் ஆகியிருக்கிறது. வாக்காளர்களைக் கவரும் விதமாக பெரும்பலான கட்சிகள் நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றன. திமுக, காங்கிரஸ் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்திருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக போன்ற கட்சிகள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோறுவோம் என அறிவித்துள்ளது. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு பற்றியோ ஸ்டெலைட் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.

இந்நிலையில் பாஜக அமைச்சரும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல்  “நீட் தேர்வு தேவையில்லை என்று அதிமுக கூறவில்லை” என்று கூறியிருப்பது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் அனிதா, செஞ்சி பிரதீபா போன்றவர்கள் மருத்துவம் படிக்கும் தகுதி இருந்தும் நீட் தேர்வு நடைமுறையால் மருத்துவக்கல்வி சாத்தியமில்லாமல் போய் தற்கொலை செய்து கொண்டார்கள். இது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த பியூஸ் கோயலிடம் நீட் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பியூஸ் கோயல் “நீட்  தற்போது அனைத்து மாநிலங்களிலும்  மாநில மொழிகளிலும் நடத்தப்படுகிறது. தமிழக மக்கள் கேட்டுக் கொண்டபடி தமிழில் நீட் தேர்வு எழுத நாங்கள் அனுமதியளித்துள்ளோம். ஆனால், ராகுல்காந்தியோ பழைய படி மருத்துவக் கல்விக்கான இடங்களைப் பெறுவதில் முறைகேடு நடப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் நீட் தேர்விலிருந்து விலக்களிப்போம் என்கிறார். ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை தடுத்து பணக்கார மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது.நீட் தேர்வை ரத்து செய்தால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு படிக்க இடம் கிடைக்காது “ என்று தெரிவித்தார்.

உங்கள் கூட்டணிக் கட்சியான அதிமுக, பாமக போன்ற கட்சிகள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்போம் என்று கூறியுள்ளதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பியூஸ் கோயல்:-

“நீட் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்றுதான் அதிமுக கோரிக்கை வைத்தது. நாங்களும் அதை ஏற்றுக் கொண்டு நீட் தேர்வை தமிழில் நடத்துகிறோம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் கருதவில்லை. இது தொடர்பாக அதிமுகவினரிடம் பேசி அவர்களை சம்மதிக்க வைப்போம்” என்று தெரிவித்தார்.

You'r reading நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக சொல்லவில்லை- பியூஸ் கோயல் அறிவிப்பால் அதிமுக அதிர்ச்சி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை