தமிழக அரசு வேலைக்கு வெளிநாட்டினரா? எடப்பாடி அரசு மீது வைகோ பகீர் புகார்

vaiko alleged that eps govt allows foreigners in state govt jobs

by எஸ். எம். கணபதி, May 31, 2019, 14:25 PM IST

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்னர்.
தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை டான்ஜெட்கோ நேற்று வெளியிட்டுள்ளது. உதவி மின் பொறியாளர்கள் 300 பேரில் 36 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

உதவி மின் பொறியாளர் மொத்த பணி இடங்களில் 12% பேரை கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசு தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
தமிழ்நாட்டில் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றபோது, பொறியாளர் பணி இடங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து தேர்வு செய்திருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல் நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமம் ஆகும்.

2013 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், 2016, செப்டம்பர் 1ம் தேதி சட்டமன்றத்தில் தமிழக அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் என்ற புதிய சட்டத்தை எடப்பாடி அரசு கொண்டு வந்து நிறைவேற்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது. இதன்படி 7.11.2016 இல் கொண்டுவரப்பட்ட புதிய உத்தரவின்படி. தமிழக அரசுப் பணிகள் வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, நேபாளம், பாகிஸ்தான், பூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் பணியமர்த்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை 7.11.2017 இல் தமிழக அரசு வெளியிட்டது. அதில் இயந்திரப் பொறியியல் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில். பொதுப்பட்டியலில் 67 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 46 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது 68 சதவீதம் அயல் மாநில இளைஞர்கள். அதே போன்று மின்னணு தொடர்பியல் துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில் பொதுப்பிரிவில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர்.

பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர்கள் தேர்வில் மதிப்பெண் ஊழல் காரணமாக பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போன்று தற்போது மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல.

மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்குத்தான் அரசுப்பணி என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதைப் போன்று தமிழ்நாடு அரசும் சட்டம் இயற்றி தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நூறு விழுக்காடு பணி வாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

You'r reading தமிழக அரசு வேலைக்கு வெளிநாட்டினரா? எடப்பாடி அரசு மீது வைகோ பகீர் புகார் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை