வெங்காயத்தால் ஆட்சியே போகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..

Stalin slams central and state governments for onion price hike

by எஸ். எம். கணபதி, Dec 9, 2019, 12:58 PM IST

வெங்காய விலை உயர்வை அலட்சியப்படுத்தினால், மக்களிடம் இருந்து வெகுதூரம் போய் விடுவீர்கள் என்று மத்திய, மாநில ஆட்சியாளர்களை மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெங்காயத்தை உரிக்கும் போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது.
தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்று கிடுகிடு விலை உயரும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது. இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன.
முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கி விட்டு, முட்டைக்கோஸ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன கடைகள். வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலை கூடி விட்டது.

கடலூரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாகக் கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளார்கள். ஆட்டோவில் ஏறிய ஒருவர், பணத்துக்குப் பதிலாக வெங்காயம் கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் வருகிறது. வைர நகைகள் மாதிரி, வெங்காயத்தில் நகை செய்வதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். வெங்காயம் வாங்குற அளவுக்கு நீங்க பணக்காரங்களா?' என்கிறது ஒரு மீம்ஸ். இப்படி வானத்தைத் தொட்டு விட்டது, வெங்காயத்தின் விலை.

இவை நாட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகள் அல்ல; நாம் கண்ணெதிரே அன்றாடம் காணும் எதார்த்தமான நிகழ்வுகளாக, உண்மைக் காட்சிகளாக இருக்கின்றன.
மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மிக முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம், ஏழை - எளிய - நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகி விட்டது.

கடந்த நவம்பர் முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 2-ம் தேதி ரூ.110-ஆக உயர்ந்தது. டிசம்பர் இரண்டாவது வாரம் ரூ.140-ஆக உயர்ந்தது. அதன்பிறகு நித்தமும் உயர்ந்து 200 ரூபாய் ஆகிவிட்டது! வெளிச்சந்தை விலைகளைச் சொல்லவே முடியாது. 230 ரூபாய் முதல் 250 வரை ஆகிவிட்டது.

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவே வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்; பெரும்பாலானோர் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனைக் குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை. இதெல்லாம் நம்முடைய வேலையா?' என்ற அலட்சியத்தில் ஆட்சி நடத்துகிறார்களா?

வெங்காயத்தின் விலை சில மாதங்களாகவே உயர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழை என்று சொல்லப்படுகிறது. நாசிக்கில் இருக்கும் வெங்காயக் கொள்முதல் சந்தையில் இருந்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதிக மழை காரணமாக அங்கு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது; கொண்டு வரும் பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டது. எனவே சென்னைக்கு வரும் வெங்காயத்தின் அளவு பாதியாகக் குறைந்தது. இதுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம்.

இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல; மற்ற மாநிலங்களுக்கும் இதே நெருக்கடிதான் என்று முதலமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியைப் பெருமளவுக்குச் சமாளித்துவிட்டன. தமிழகம் வழக்கம்போல, எல்லாவற்றையும் போல, போதிய அளவு வெங்காயம் விநியோகத்திற்குச் செல்வதிலும், வெங்காய விலையை மக்களின் தாங்கும் சக்திக்கேற்ப கட்டுப்படுத்துவதிலும் மிகவும் பின்தங்கி விட்டது.

இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் இருக்கிறது.
வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட, அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை?

நாடு முழுவதும் தினமும் ஏராளமான விருதுகளை வாங்கி வருவதாகச் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க. அரசால், உலகம் முழுவதும் சென்று பல்வேறு பட்டங்களைப் பெற்று வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சரால், இந்த நடவடிக்கைகளில் ஏன் இறங்க முடியவில்லை? என்பதுதான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும்.

வெங்காயத்தை அதிக விலை கொடுத்து சில்லறை வணிகர்களால் வாங்க முடியவில்லை, அதிக மழை காரணமாக எடுத்துவர முடியவில்லை, இடைத்தரகர்கள் பதுக்குவது - என்பது போன்ற பிரச்சினைகளை, ஒரு அரசாங்கம் மனது வைத்தால், உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்க்க முடியாதா?

ஒரே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை மாநிலம் முழுக்க நடத்துவதற்குத்தான் திறனற்றுப் போனது என்றால், வெங்காய விலையையுமா கட்டுப்படுத்திடத் திராணியற்றுப் போய்விட்டது?

இது ஏதோ சாதாரண வெங்காயம்தானே என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. கடந்த காலத்தில் தேர்தல் முடிவுகளை - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையே, மாற்றக் கூடிய முக்கியமான அம்சமாக வெங்காயத்தின் விலைகள் இருந்துள்ளன.

1980-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான பிரச்சாரத்தில், வெங்காயம் முக்கியப் பங்கு வகித்தது. "கூட்டணி அரசின் தோல்வியால் வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்துவிட்டது" என்று இந்திரா காந்தி அம்மையார் தீவிரப் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

1998-ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, டெல்லி யூனியன் பிரதேசத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்ததுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவது இல்லை' என்று மத்திய அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் சொல்கிறார் என்றால், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை சாப்பிடுவதைத் தவறு என்று சொல்கிறாரா? முன்னேறிய வகுப்பு எண்ணத்தோடு அப்படிச் சொல்கிறாரா? பூண்டு விலையும் 40 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக வணிகர்கள் சொல்கிறார்கள். மக்களின் வயிற்றில் கை வைக்கும் இந்த விலைவாசி உயர்வு குறித்து மத்திய - மாநில அரசுகளுக்குச் சிறிதும் அக்கறை இல்லை.

இரண்டுமாத காலமாக தொடமுடியாத உயரத்துக்கு விலை உயர்ந்த பிறகு, ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வோம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். இந்த விலை உயர்வால் மக்கள் படும் அவதியை இந்த ஆட்சியாளர்கள் இப்போதுதான் உணர்கிறார்களா?

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் போகிறோம். ஜனவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு தாராளமாகக் கிடைக்கும்' என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் தன்வே ராவ்சாகிப் தாதாராவ் சொல்லி இருக்கிறார். அமைச்சர் சொல்வதே ஜனவரி 20 என்றால், நிலைமை மொத்தமாகச் சீரடைய இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம்.
மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கிக் கிடக்கிறது.

வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை, விலை ஏற்றங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும் நியாய விலையிலும் கிடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள் என்று எச்சரிக்கை செய்வது எனது கடமை ஆகும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading வெங்காயத்தால் ஆட்சியே போகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை