தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு சரியானதல்ல! - மத்திய அரசைச் சாடும் திருநாவுக்கரசர்

Feb 26, 2018, 20:46 PM IST

' தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு சரியானதல்ல என்று மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் சாடி உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொண்டவிதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது அவசியமில்லாமல் காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த காலங்களில் பிரதமர் பொறுப்பில் இருந்தவர்கள் பின்பற்றிய அரசியல் நாகரீகத்தை கொஞ்சம் கூட பின்பற்றாமல் பேசியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அடுத்த ஜூன் மாதத்திற்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தை தவிர, காங்கிரஸ் ஆட்சி செய்கிற மாநிலம் எதுவும் இந்தியாவில் இருக்காது என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். இதில் கூட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதை மறந்து பேசியிருக்கிறார். இவரது கனவு பகல் கனவாகத்தான் முடியுமே தவிர, அது நிச்சயம் நிறைவேறப் போவதில்லை.

கடந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததோடு, வாக்கு வங்கியும் பெருமளவில் சரிந்திருக்கிறது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் படுதோல்வியடைந்த கலக்கத்தில் ஒரு மூன்றாம் தர பேச்சாளரைப் போல பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி கூறுவார் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுகுறித்து எதுவும் கூறாதது தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலத்தின் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற ஆணையின்படியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த நரேந்திர மோடி அரசு மறுபடியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்திவிடுமோ என்கிற அச்சம் தமிழக விவசாயிகளிடம் இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற வரை தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிப்பதை தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த காலத்தில் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பியதும், அதற்கு எதிராக கடும் எதிர்ப்பு தோன்றியதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்நிலையில் இன்று சென்னை கிண்டி இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் சமஸ்கிருதத்தில் கணபதி வந்தனம் பாடியிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமஸ்கிருத மொழியை திட்டமிட்டு திணிக்க வேண்டுமென்கிற ஒரே நோக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடாமல் தமிழ் மொழி அவமதிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து விளக்கம் கூறிய ஐ.ஐ.டி. இயக்குநர் தவறுக்கு வருத்தம் கூறாமல் மிக அலட்சியமாக பதில் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

ஒரு அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற நடைமுறையை திட்டமிட்டு புறக்கணித்து விட்டு, சமஸ்கிருதத்தில் கணபதி வந்தனம் பாடியது ஏனென்று குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் உரிய விளக்கத்தை பெற வேண்டுமென மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் தொடங்கி, மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிப்பதற்கும், காங்கிரஸ் கட்சியை வரம்பு மீறி வசை பாடுவதற்கும், காங்கிரஸ் இல்லாத பாரதம் காண கனவு காண்பதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பதிலடி தமிழக மக்கள் தேர்தலின் போது தருவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு சரியானதல்ல! - மத்திய அரசைச் சாடும் திருநாவுக்கரசர் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை