மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? எடப்பாடிக்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி..

மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தனது கோரமுகத்தைத் தமிழகத்திலும் காட்டி, வரும் நிலையில், தமிழக அரசு அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பல தளங்களிலும் பேசப்பட்டு வரும் கருத்துக்களை, முதல்வருக்குக் கடிதமாக அனுப்பி இருந்தேன். அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு முதல்வரின் கவனத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் அக்கறையுடன் விடுத்த அறிக்கைக்கு அவர் ஆத்திரத்துடன் பதில் தந்துள்ளார்.
அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் நான் சித்தரிப்பதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அரசு எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை; அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க. சார்பில் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவோம் என்றுதான் சொன்னேன்.


“யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை. எல்லாம் எனக்குத் தெரியும்; தானே எல்லாம்” என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்து விட்டதைத்தான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது.

“மற்ற மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, சர்வதேசப் பயணிகளை விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்திக் கண்காணிப்பில் வைத்தோம்” என்கிறார். பின்னர் அவரே, ''வெளியிலிருந்து வந்தவர்கள் சிகிச்சைக்குத் தாமாக முன்வர வேண்டும்” என்று ஏப்ரல் 1-ம் தேதி பேட்டி கொடுத்தார்.
விமான நிலையச் சோதனைகளை ஜனவரியில் தொடங்கி விட்டோம் என்றால், மூன்று மாதம் கழித்து, முதல்வர் எதற்காக இப்படி பேட்டி அளிக்க வேண்டும்? ஜனவரி மாதத்திலேயே இந்த நோயினைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள், முழு உடல் கவச உடைகள், மருந்துகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஆணை வழங்கிய தீர்க்கதரிசியான அரசு அம்மாவின் அரசாகும்" என்று தனது முதுகைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு முதலமைச்சர் சொல்கிறார்.

ஆனால், ''ஒன்றரைக் கோடி முகக்கவசம், 25 லட்சம் 'என்-95' முகக்கவசம், 10 லட்சம் பாதுகாப்பு முகக்கவசம், 2500 வெண்டிலேட்டர், 30 ஆயிரம் சோதனைக் கருவிகள் வாங்கப்பட உள்ளது" என்று மார்ச் 30-ம் தேதி முதல்வர் பேட்டி கொடுத்தாரே? - எது உண்மை? மேலும், இவையெல்லாம் வாங்குவதற்கு 3 ஆயிரம் கோடி பணம் வேண்டும் என்று ஏப்ரல் 3-ம் தேதிதான் பிரதமரிடம் பணம் கேட்கிறார் முதல்வர். எது உண்மை?
இவர், ஒன்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; அல்லது கண்ணாடி முன் நின்று சற்று பின்னோக்கிப் பார்த்து யோசிக்க வேண்டும். கூவத்தூர் முதல் கோட்டைவரை இவரது சந்தர்ப்பவாதத்தைப் பார்த்து, இவரது கட்சியினரே இவருடைய முதுகுக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கிய நிலையில் - பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியது திமுகதான். சட்டமன்ற நடவடிக்கைகளை ஒருமுறை திரும்பப் படித்துப் பார்த்தாலே அனைத்தும் முதலமைச்சருக்குப் புரியும்.

சட்டமன்றத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும்' என்று வைத்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி, “போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டியதில்லை” என்று கடந்த மார்ச்17ம் தேதி அறிவித்தது யார்? - இதுதான் தீர்க்க தரிசனத்திற்கான அடையாளமா? நோய் வருவது இயற்கை. அது தமிழகத்தில் அபாயகரமாக இல்லை என்றும், சட்டமன்றம் நடைபெற்றால்தான் மக்கள் அச்சமின்றி இருப்பார்கள் என்றும் கூறியது யார்? அவையை ஒத்தி வைப்பது மக்களை பீதிக்குள்ளாகும் என்று கூறிவிட்டு, பிறகு அவையை முன்கூட்டியே முடித்தது யார்?

நோயின் தீவிரத்தை உணராமல், முதலில் 60 கோடி மட்டும் நிதி ஒதுக்கியது யார்? பிறகு நான், “1000 கோடி ரூபாய் ஒதுக்குங்கள்” என்று கோரிக்கை விடுத்த பிறகு 500 கோடி ரூபாயாக உயர்த்தியது யார்? இதுதான் கொரோனாவின் கொடுமையை உணர்ந்ததற்கான ஆதாரமா?

அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று நான் முதலில் கோரிக்கை விடுத்த போது, கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் 24.3.2020 அன்று அறிவித்துவிட்டு, தற்போது 8.4.2020 அன்று பிற அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் சேர்த்து மீண்டும் அறிவித்தது யார்?

ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அரசு தொடர்ந்து செயலாற்றுகிறது என்று வெளிக்காட்டும் முயற்சி இல்லையா? - அந்த அளவுக்கு விளம்பர வெளிச்சம் முதல்வரை வேதனைப்படுத்துகிறது.

24.3.2020 அன்று சட்டமன்றத்தில் அரிசி ரேசன் கார்டுகளுக்கு மட்டும் 1000 ரூபாய் என்று கூறிவிட்டு, பிறகு 25.3.2020 அன்று தொலைக்காட்சி உரையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 1000 ரூபாய் என்று அறிவித்தது யார்? - ஏன் இந்தக் குழப்பம்?
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என 29.3.2020 அன்றே நான் கோரிக்கை விடுத்தபோது, “இது மருத்துவம் சார்ந்த பிரச்சினை. அரசியல் அல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை” என்று கூறி விட்டு - 3.4.2020 அன்று அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தியது யார்?

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் - 13 வகையான தொழிற்சாலைகளைத் திறக்க தலைமைச் செயலாளர் மூலம் 7.4.2020 அன்று உத்தரவு பிறப்பிக்க வைத்து, பிறகு அதே தேதியில் - சில மணி நேரத்தில் தொழிற்துறை முதன்மைச் செயலாளரை விட்டு தலைமைச் செயலாளர் உத்தரவை ரத்து செய்ய வைத்தது யார்? யாருடைய தலையீட்டினால் இந்த மாற்றம்?

இவை அனைத்துமே, கொரோனா குறித்து, தமிழக முதலமைச்சருக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனால், தானே எல்லாவற்றையும் முன்னெடுத்துச் செய்வதாகக் காட்டிக் கொள்வதில் மட்டும் தணியாத ஆசை!

“நோய்த் தொற்று மூன்றாம் நிலைக்குச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது” என்று 9.4.2020 அன்று முதலமைச்சர் ஒருபுறம் அறிவிக்கிறார். “நோய்த் தோற்று இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளது” என்று 10-ஆம் தேதி தலைமைச் செயலாளர் அறிவிக்கிறார். தானும் குழம்பி, மக்களையும் குழப்பியது எந்த அரசு? இது என்ன புதுக் குழப்பம் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள்.

“கேரளாவிற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஆர்டர் கொடுத்து விட்டோம்” என்று கூறும் முதலமைச்சர், நேற்று பிரதமருடனான வீடியோ கான்பரன்ஸில், “பி.சி.ஆர், ரேபிட் கிட்ஸ்கள் அதிக எண்ணிக்கையில் வேண்டும்” என்றும், “பி.பி.இ, என்-95 முகக்கவசம், வென்டிலேட்டர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டியதிருக்கிறது” என்றும் கூறியது ஏன்?

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதில் கூட இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட புதிய ஆதாரம் வேண்டுமா?
“இரு வருடங்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் நோய்த் தொற்றைத் தடுக்க பல கோடி ரூபாய்களை தி.மு.க. எம்.பி.க்கள் இந்த நிதியின் கீழ் ஒதுக்கியிருந்த போதிலும், இந்த நிதியை நிறுத்திய மத்திய அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறாமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது யார்?

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலிருந்தும் ஒரு கோடி ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்து இரட்டை வேடம் தரித்து நிற்பது யார்?
இந்த நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத்தான் பயன்படுகிறது என்கிறார் முதல்வர். சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதி மக்கள் தேவை அறிந்து மக்களுக்காகத் தான் அந்நிதியை ஒதுக்கப் போகிறார்கள். உண்மை என்னவென்றால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றி வரும் மக்கள் சேவையைத் தடுக்கும் சதிதான் இந்த நடவடிக்கையே தவிர வேறல்ல!

தமிழக மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய சுகாதாரப் பேரிடர் பிரச்சினையில், சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி - பிறகு சுகாதாரச் செயலாளரை முன்னிலைப்படுத்தி - அவரையும் புறந்தள்ளி இப்போது தலைமைச் செயலாளரையே தனது செய்தித் தொடர்பாளராக மாற்றிக் கழுத்தறுப்பு அரசியல் செய்து கொண்டிருப்பது யார்? - எல்லாம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்!

ஒடிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையிலும், பா.ஜ.க. ஆளும் கர்நாடகம் முடிவெடுத்துவிட்ட பிறகும், “தமிழகத்தில் உடனடியாக ஊரடங்கு குறித்து முடிவு எடுங்கள்” என்று நான் விடுத்த வேண்டுகோள் முதலமைச்சருக்கு அரசியலாகத் தெரிகிறது. ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? 'கொரோனாவை' முழுமையாக ஒழித்து விட்டாரா? மத்திய அரசு என்ன நினைக்குமோ என்று உள்ளூர பயம்தான் காரணம்!
மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்த சுயநலத்தாலும் கோழைத்தனத்தாலும், தமிழகம் இழந்த பெருமைகள் எத்தனையோ உண்டு! இப்போது உயிர்களையும் இழக்கும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டு விட்டது.

மத்திய அரசிடம் முதலில் 9 ஆயிரம் கோடி ரூபாயும் அதன்பிறகும் 3,200 கோடி ரூபாயும் கேட்டவர் முதல்வர். அவர் சொல்லும் கணக்குப்படி மத்திய அரசு இதுவரை கொடுத்துள்ள தொகை 870 கோடியே 24 லட்சம் ரூபாய்தான். கேட்டதில் பத்தில் ஒரு பங்கு! மற்ற பங்கைக் கேட்பதற்கு முனைப்போ - முதுகெலும்போ இல்லாதவராக முதலமைச்சர் இருக்கிறார்!

நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில், மக்களைப் பார்த்து நிதி கொடுங்கள் என்று அறிக்கை விட்டுக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். “100 ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன்” என்று பேட்டியும் கொடுத்தார். எதற்காக இந்த நிலைமை?

தனது உரிமையை முன்னிறுத்தி மத்திய அரசிடம் கேட்கக் கூடத் தைரியம் இல்லை! - அந்த கையாலாகாத்தனத்தை மறைக்க மக்களிடம் கெஞ்சுகிறார்; மக்கள் பிரதிநிதிகளாம் சட்டமன்ற உறுப்பினர் உரிமையில் கை வைக்கிறார்.

தி.மு.க.வையும் என்னையும் இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் என்று கொச்சைப்படுத்தி அறிக்கை விடுகிறார் என்றால் அவர் நடந்து கொள்ளும் தன்மைகள், அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. இவருடைய இரட்டை வேடம், நாடு நன்கு அறிந்ததே! நீட் தேர்வில் இரட்டை வேடம்; பத்து சதவிகித இட ஒதுக்கீட்டில் இரட்டை வேடம்; ஹைட்ரோகார்பனில் இரட்டை வேடம்; இப்படி, எத்தனை எடப்பாடிகளோ என்று கூறுமளவுக்கு, எல்லாப் பிரச்சினைகளிலும் இரட்டை வேடம் போட்டு, கபட நாடகம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 10-ஆம் தேதி முதல் "ரேபிட் டெஸ்ட் கிட்" மூலம் பரிசோதனை செய்யவிருப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், தமிழகத்திற்கு வந்து சேரவேண்டிய "ரேபிட் டெஸ்ட் கிட்" இன்னும் வந்து சேரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டேன். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டா?

''ஒரு லட்சம் டெஸ்டிங் கிட்டுக்களை இறக்குமதி செய்ய முடிவெடுத்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் அவை முழுமையாகத் தமிழகம் வந்து சேரும்" என்று ஏப்ரல் 2-ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சொன்னார். இதையே 6-ஆம் தேதி முதல்வரும் சொன்னார். பின்னர் '9-ஆம் தேதி வந்துவிடும்' என்றார் முதல்வர். இன்றுவரை வரவில்லையே? - என்ன காரணம்?
10-ம் தேதி முதல் அரைமணிநேரத்தில் பல லட்சம் பேருக்கு பரிசோதனை செய்வோம்" என்றாரே முதல்வர், என்ன ஆனது?
“கொரோனா டெஸ்டிங் பொருட்களை, மாநிலங்கள் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்யவும், இறக்குமதி செய்யவும் வேண்டாம். மத்திய அரசே இறக்குமதி செய்து உரிய முறையில் வழங்கும்” என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி விட்டதாகச் செய்தி வருகிறதே. இது உண்மையா?

ஜனவரி மாதமே தயார் நிலையில் இருந்தோம் என்று மார்தட்டிக் கொள்பவரைத்தான் கேட்கிறேன். ''கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதலே இந்த ரேபிட் டெஸ்ட் கிட்-ஐ கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவிலேயே கொரோனா தொற்றில் இரண்டாவது இடத்திலுள்ள தமிழகம், இன்னும் இந்த ரேபிட் டெஸ்ட்டை நடைமுறைக்குக் கொண்டு வராதது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது" என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு இருப்பது முதல்வர் காதில் விழவில்லையா?
நான் வைத்துள்ள கோரிக்கைகள், ஆலோசனைகள் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் தானே தவிர மருத்துவர்கள் மீதல்ல. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் எனக் களத்தில் நிற்கும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால் இன்றைக்கும் சில மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்படுமளவுக்கு நிலைமை மாறிக்கொண்டு இருக்கிறது என்ற கவலையில்தான் சொன்னேன். அதை உணராமல், தன் மீது விழும் பழியைத் துடைத்துக் கொள்ளும் வழி அறியாது, மருத்துவர்கள் மீது போட்டுத் தப்பி ஓடப் பார்க்கிறார் முதல்வர்.

இன்றைக்கு ஏதோ மருத்துவர்களின் ஒரே காப்பாளர் போலப் பச்சோந்தியாய் நடிக்கிறார் முதலமைச்சர். ஆனால், தமிழக அரசால் பழிவாங்கும் நோக்கத்தோடு பணிமாற்றம் செய்யப்பட்ட 135 மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரைக்கும் பணிமாறுதல் செய்யாமல் பிடிவாதம் செய்வதற்குப் பின்னால் உள்ள ஆணவம், பழிவாங்கும் பாழ்பட்ட நோக்கம் அனைத்து மருத்துவர்களும் அறிந்ததுதான்.
அரசிடம் கோரிக்கை வைத்துப் போராடினார்கள் என்பதால், 135 மருத்துவர்களுக்கு "சார்ஜ் மெமோ" கொடுத்தது எடப்பாடி அரசு. அவர்களை வெவ்வேறு இடங்களுக்குத் தூக்கியடித்தது எடப்பாடி அரசு. இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் போனார்கள். நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், ''போராட்டத்தில் 18,000 மருத்துவர்கள் பங்கேற்ற நிலையில் 135 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது, அவர்களைத் தண்டிக்கும் நோக்கமே தவிர வேறு ஒன்றுமில்லை. சார்ஜ் மெமோ, பணி இடமாற்றம் ஆகிய உத்தரவுகளை ரத்து செய்கிறேன்" என்று தீர்ப்பளித்தார். பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி இந்தத் தீர்ப்பு வந்தது. இதுவரைக்கும் அந்த மருத்துவர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கவுமில்லை; சார்ஜ் மெமோவைத் திரும்பப் பெறவுமில்லை.
இப்படிப்பட்ட இரக்கமற்றவர்தான், நான் ஏதோ மருத்துவர்களைக் குறைசொல்வதாகச் சொல்கிறார். அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறப்பூதியம் வழங்கப்படுமா என்று கேட்டபோது, “அவர்கள் பணிபுரியும் தொழிலில் தானே பணிபுரிகிறார்கள்” என்றும், ஆம்புலென்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றிக் கேட்டபோது, “ஆம்புலென்ஸ் தொழிலாளர்கள் தானா எனக்கு ஒன்றும் புரியவில்லையே” என்றும் கிண்டலடிப்பதுதான் அம்மாவின் அரசா?

அரசியல் பேசுவதற்கான நேரம் இதுவல்ல; இன்றைய சூழ்நிலை என்பது, நாடே துயர மன நிலைமையில் இருக்கிறது. இந்த நேரத்திலும் உண்மையைப் பேசாமலும், திரைமறைவுக் காரியங்களில் ஈடுபட்டும், வாய்க்கு வந்தபடி புள்ளிவிவரங்களை வாரி அடித்து விட்டும் மக்களது வாழ்க்கையில் இந்த அரசு விளையாடுமானால் அதைக் கைக்கட்டி வேடிக்கை பார்க்க முடியாது!

அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds