டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவு.. ஆன்லைனில் விற்க அனுமதி..

High court orders closing tasmac liquor shops in tamilnadu.

by எஸ். எம். கணபதி, May 9, 2020, 11:13 AM IST

டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூடுவதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. கடந்த மே 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்த போது, பல கட்டுப்பாடுகளை நீக்கியது. அதில் மதுக்கடைகளையும் திறக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.இதற்கிடையே, மதுபானக் கடைகள் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில், ஊரடங்கால் டாஸ்மாக் மதுபானக்கடைகள் 40 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டதால் குடிப்பழக்கம் உடையவர்கள் அந்த தீங்கிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது மதுபானக் கடைகளை அரசே மீண்டும் திறப்பதால், கொரோனா வைரஸ் பரவுவது மேலும் அதிகரிக்கும். ஊரடங்கால் குறைந்திருக்கும் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்கும். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போன்று, பலரும் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவற்றை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலம் விசாரித்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க தடை விதிக்க முடியாது. ஆனாலும் சில நிபந்தனைகளை விதிக்கிறோம். ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு புல் பாட்டில்களுக்கு மேல் விற்கக் கூடாது. மேலும் 3 நாள் இடைவெளி விட்டு வாரத்திற்கு 2 முறை மட்டுமே ஒருவருக்கு மதுபாட்டில் தர வேண்டும். இதற்காக மதுபாட்டில் வாங்குவோர் ஆதார் அட்டைகளைக் காண்பிக்க வேண்டும். மது விற்பனைக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.


மேலும், பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அதிக விலைக்கு மது விற்பனை செய்வதையும், மொத்தமாக விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அந்த வரிசையின் அடிப்படையில் மது விற்பனை செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், அந்த மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் மீண்டும் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதில், எந்த கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அலைமோதியதால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. அதனால், மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடுகிறோம். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் ஒரே நாளில் ரூ.172 கோடிக்கு விற்பனையானது. இப்போது மீண்டும் மதுபானக் கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் பாதிக்கும் என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

You'r reading டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவு.. ஆன்லைனில் விற்க அனுமதி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை