ரஜினியை அரசியல் பேச வைத்து பாஜக காவேரி பிரச்னையை திசைத்திருப்புகிறது-வேல்முருகன்

Mar 6, 2018, 19:07 PM IST

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த பிரச்னையை திசை திருப்பவே ரஜினியை அரசியல் பேச வைத்துள்ளது பாஜக என வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினியின் அரசியல் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினியின் அரசியல் பேச்சு பாஜகவின் சதி என்று குற்றம்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றம் தீர்ப்பு மேலும் அந்த அறிக்கையில், கடந்த மாதம் 16ம் தேதியன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுவிட்டது.

காவிரி மேலண்மை வாரியத்தில் பங்கேற்கும் மாநிலப் பிரதிநிதிகளின் பெயர்களைக் கூட கடந்த ஆண்டே தெரிவித்தாகிவிட்டது. அப்படியிருக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஒருதலைப்பட்சமாக கர்நாடகத்துக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. அதற்காக பிரச்சனையை மடைமாற்றும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கர்நாடகத் தேர்தல் காவிரி மேலாண்மை வாரியம் குறித்துப் பேச என்று தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் டெல்லிக்கு அழைத்திருக்கிறது மத்திய நீர்வளத்துறை அமைச்சகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான 42 நாள் கெடுவில் இன்றுடன் 18 நாட்கள் முடிகிறது. இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், பிரச்சனையை கர்நாடகத் தேர்தலைத் தாண்டி இழுத்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதுதான் மோடி அரசின் எண்ணம்.

அதற்காகத்தன் 4 மாநிலங்களுடன் பேசுவதற்கான இந்த அழைப்பு. பாஜகவின் திட்டமிட்ட சதி இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தமிழகத்தில் வலுத்திருப்பதால் அதனைத் திசைதிருப்புவதற்காக நடிகர் ரஜினிகாந்தை ஏவி எம்.ஜி.ஆர் சிலை திறப்பு என்ற ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு. இப்படிப்பட்ட வேலைகளுக்கென்றே அமைச்சர் என்ற பெயரில் வைத்துக்கொண்டிருக்கிற பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் ஊடகத் துணையுடன் அந்த வேலையைச் செய்திருக்கின்றனர்.இதில் கவனமாக இருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே 4 மாநிலப் பிரதிநிதிகள் சந்திப்புக்கு தமிழக அரசு உடன்படக் கூடாது.

காவிரி மேலாண்மை வாரியம் அதில் கலந்துகொள்வது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு எதிரானது மட்டுமல்ல; மோடியின் சூழ்ச்சிக்குத் துணைபோவதுமாகும். இதை மீறி, ஒருவேளை அரசியல் அழுத்தத்தின் காரணமாக அந்த சந்திப்பைத் தவிர்க்க முடியாது என்று அதில் கலந்துகொண்டாலும், அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட கெடுவிற்குள் அமைத்தாக வேண்டும் என்பதில் கறாராக, உறுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ரஜினியை அரசியல் பேச வைத்து பாஜக காவேரி பிரச்னையை திசைத்திருப்புகிறது-வேல்முருகன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை