மேட்டூர் அணை திறக்கும் முன் தூர்வாரும் பணியை முடிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்..

Stalin request govt. to speed up irrigation works.

by எஸ். எம். கணபதி, May 25, 2020, 14:16 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது : இந்தியாவிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சி தான்.


ஆனால் இன்றைக்கு “தும்பை விட்டு வாலைப்பிடிப்பது” போல், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது தூர் வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும் என்பதும், அதற்குரிய நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது பற்றி பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. மாறாக நெடுஞ்சாலைத் துறையில், எப்படி கொரோனா காலத்திலும் டெண்டர் விடுவது- அந்த டெண்டரில் எப்படி ரேட்டை உயர்த்திப் போட்டு ஊழலுக்கான ஊற்றுக்கண்ணை மேலும் பெருக்கிக் கொள்வது என்பன போன்றவற்றில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்தி வந்தது, தற்போது அது உயர்நீதிமன்ற விசாரணைக்கே போய் விட்டது.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர் வாரும் பணிகளை அறிவித்து- அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. அணை திறக்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், அதற்குள் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாரி விடுவார்களா?

மேட்டூரில் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடையுமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. துறை அமைச்சரின் அலட்சியம் அணையிலிருந்து வரும் காவிரி நீரும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பது “பதில்” தெரியாத புதிராகவே இப்போது வரை இருக்கிறது.
ஆகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வழக்கம் போல் அதிகாரிகளை நியமித்து- அவர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்று- தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்து விட்டது போன்ற “கற்பனை”த் தோற்றத்தை உருவாக்கி “கணக்கு”க் காட்ட முயற்சிக்காமல்- மேற்கண்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறச் செய்து; கால்வாய் தூர் வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும்- வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading மேட்டூர் அணை திறக்கும் முன் தூர்வாரும் பணியை முடிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை