சென்னை கொரோனா பாதிப்பு 38 ஆயிரம்.. தமிழ்நாட்டில் பலி 666.

Covid-19 cases crossed 54,000 in Tamilnadu.

by எஸ். எம். கணபதி, Jun 20, 2020, 09:57 AM IST

தமிழகம் முழுவதும் இது வரை 54,449 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில் 38 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றிக் கொண்டிருக்கிறது.


தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்19) ஒரே நாளில் 2115 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 40 பேரும் அடக்கம்.சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேர், மாலத்தீவில் இருந்து வந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிரா 13, கர்நாடகா 3, ராஜஸ்தான், பீகார் 2, கேரளா மற்றும் ஜார்கண்டில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 54,449 பேராக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1630 பேரையும் சேர்த்து 30,271 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 1322 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 38,327ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் நேற்று 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3432 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 85 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2291 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 79 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1001 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது.

இது வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில்தான் பெரும்பாலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் தினமும் தலா 10, 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 41 பேர் பலியாயினர். இதை அடுத்து, சாவு எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது.

You'r reading சென்னை கொரோனா பாதிப்பு 38 ஆயிரம்.. தமிழ்நாட்டில் பலி 666. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை