பெண் வேடமிட்டு கொள்ளையடிக்க சென்ற துணிகர வாலிபர்கள்!

சென்னையில் மருத்துவர் வீட்டில் பெண் வேடமிட்டு, வாலிபர்கள் கொள்ளையடிக்கச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mar 20, 2018, 10:10 AM IST

சென்னையில் மருத்துவர் வீட்டில் பெண் வேடமிட்டு, வாலிபர்கள் கொள்ளையடிக்கச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலையில் வசிப்பவர் மருத்துவர் ராதாகிருஷ்ணன். இவர் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டுக்கு ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வந்து, தங்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று பேச்சுக் கொடுத்துள்ளனர்.

ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென அவர்கள் ராதாகிருஷ்ணனை வீட்டுக்குள் தள்ளி, அவர் மீது மயக்க மருந்தை தெளிக்க முயற்சித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் சத்தம் போட்டு கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்கவே, ராதாகிருஷ்ணன் மனைவி அங்கு வந்து பார்த்ததும் அவரும் கூச்சலிட்டுள்ளார்.

இருவரின் கூக்குரல் கேட்கவே, அந்தப் பகுதி மக்கள், ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு திரண்டு வந்து பார்த்துள்ளனர். இதனை கண்ட அந்த தம்பதியினர், அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர். ஆனால், பொதுமக்கள் அவர்களை விடாமல் விரட்டிப் பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களை, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், பெண்போன்று சுடிதார் அணிந்திருந்தவர் ஆண் என்பதும், அவர் பழனி குறும்பட்டியை சேர்ந்த சுஜந்த் (19) என்பதும், மற்றொருவர் கே.கே. நகர் மேற்கு ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த பிரகாஷ் (27) என்பதும் தெரியவந்தது.

கணவனாக பிரகாஷூம், மனைவியாக சுஜந்த்தும் நடித்து திருட வந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பெண் வேடமிட்டு கொள்ளையடிக்க சென்ற துணிகர வாலிபர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை