தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..

by எஸ். எம். கணபதி, Nov 21, 2020, 09:11 AM IST

தமிழகத்தில் நேற்று(நவ.20) புதிதாக 1688 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. இந்தியாவில் இது வரை 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் சென்றிருக்கிறது.மாநிலம் முழுவதும் நேற்று(நவ.20) 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1688 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 66,667 பேராக உள்ளது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2173 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 41,705 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 18 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,568 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு புதிதாக 1800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். பின்பு படிப்படியாக நோய் பரவல் குறையத் தொடங்கியது. நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தினமும் குறைந்து வந்து நேற்று 489 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதே போல், செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம் மாவட்டங்களில் சுமார் 50, 60 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவான பேருக்குத்தான் பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 46 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 13,404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை