தமிழ்நாடு என்ற சொல்லை நீக்க மோடி திட்டம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதல் - வேல்முருகன்

தமிழ்நாடு என்ற சொல்லையே அடித்துவிடுவதென்ற மோடியின் திட்டம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்படுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

by Lenin, Apr 22, 2018, 17:12 PM IST

தமிழ்நாடு’ என்ற சொல்லையே அடித்துவிடுவதென்ற மோடியின் திட்டம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்படுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு’ என்ற சொல்லையே அடித்துவிடுவதென்ற மோடியின் திட்டம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்படுகிறது! உயர்கல்வியிலிருந்தே தமிழரை அகற்றிவிடுவதற்கான ’நீட்’ போன்ற தகிடுதத்த தில்லுமுல்லுகளை அனுமதித்திருப்பதே இதற்குச் சான்று!

தமிழ்நாட்டை அழித்தொழிக்கும் தனது திட்டத்தின்படி ஒரே நேரத்தில் அனைத்து நிலைகளிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் மோடி. இதனால் எங்கெங்கும் போராட்டங்கள்! தொடர் போராட்டங்கள்! யாரும் எந்த வேலைக்கும் சென்றுவிடக் கூடாது. மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது. மாணவர்கள் கல்வி பயிலக் கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருக்கக் கூடாது.விவசாயி தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும்; போராடி, கத்தி தொண்டைத் தண்ணியும் போகட்டும்.

படித்துவிட்டு வேலை தேடி ஓய்ந்துபோன இளைஞன் என்ன செய்வான் செய்வதைச் செய்யட்டும். இதுதான் மோடி! நீங்கள் தலைகீழாக நின்றாலும் சட்டை செய்யமாட்டார்! எதுவுமே உறைக்காது! ஏனென்றால் அவர் கார்ப்பொரேட்களுக்காக ஆட்சி நடத்துகிறார்; கஞ்சிக்குச் செத்தவர்களுக்காக அல்ல!

அவருக்கு கடமைப்பட்டவர்களாக இங்கே தமிழக ஆட்சியாளர்கள்! ஊழலைத் தவிர வேறெதுவும் செய்யாத, தெரியாத ஆட்சியாளர்கள்! இத்தனைக்கும் சட்டமன்ற பெரும்பான்மை இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள்!

இவர்களை சட்டத்துக்குப் புறம்பாகவே விட்டுவைத்து, தனது “ஆளுநர்” மூலமாக ஆட்சியைத் தொடர்கிறார் மோடி! ஆக தமிழ்நாட்டில் தற்போது உள்ளது நூற்றுக்கு நூறு மோடி அரசுதான்; அப்படியென்றால், ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் உள்ளது? சந்தேகமென்ன, போலி அரசு!

அதனால்தான் தமிழகத்திற்கெதிரான மோடியின் திட்டத்தினை செயல்படுத்தும் அரசாக இருக்கிறது இன்றைய அதிமுக அரசு! உயர்கல்வியிலிருந்தே தமிழரை அகற்றிவிடுவதற்கான ’நீட்’ போன்ற தகிடுதத்த தில்லுமுல்லுகளை அனுமதித்திருப்பது ஒன்று போதும், இந்த அரசின் இரண்டகத்தை எடுத்துச் சொல்ல.

நேற்று சென்னை வந்திருந்த மத்திய நலவாழ்வுத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே, “நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வாய்ப்பே இல்லை” என்று உறுதிபடக் கூறுகிறார். இதற்கு இங்கு தமிழக அமைச்சர்கள் எவரும் மறுமொழி பேசவில்லை.

நலவாழ்வுத்துறை அமைச்சர் எங்கே? எதற்கெடுத்தாலும் நீட்டி முழக்கும் அமைச்சர் ஜெயக்குமார் என்ன ஆனார்? ஓபிஎஸ் முந்தாநாள்தான் டெல்லி சென்று வந்தார். அமைச்சர் செங்கோட்டையன் தேய்ந்த ரிக்கார்டாக “தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள் தயார்” என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியும் பறித்த கதையாக நடந்துகொள்கிறது மோடி அரசு இந்த நீட் விவகாரத்தில்! ஏற்கனவே கடந்த ஆண்டில் நீட்டில் நடந்த தகிடுதத்தங்கள், தில்லுமுல்லுகள், ஏன் மனித உரிமை மீறல்கள் நாடறியும்.

மாணவிகளின் உள்ளாடைகளையே அப்புறப்படுத்திய சம்பங்கள் வரை அரங்கேறின. ஆனால் அதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் கிடையாது. இந்த ஆண்டு இன்னும் கொடூர சம்பவங்கள் நடக்கக்கூடும்; அதற்கு அறிகுறியாக விதிகள் என்ற பெயரில் புதிய கெடுபிடிகள் கடைசி நேரத்தில் பார்த்து புகுத்தப்பட்டுள்ளன.

முதலில், பார்லிமென்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி இந்த நீட் தேர்வு என்பதே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

தமிழக சட்டமன்றம் அனுப்பிய நீட்-விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலளித்தாக வேண்டும் என்பதும் அரசமைப்புச் சட்டப்படியான உரிமையே. அதனை நந்தியாய் இருந்து மோடி அரசு தடுப்பதென்ன நியாயம்? இதைக் கேட்கத் துப்பில்லாத அரசு தமிழகத்தில் இருக்கிறதென்றால் அது ஒரு குற்ற அரசு, ஊழல் அரசு, போலி அரசு, மோடியின் அடிமை அரசு என்பதுதானே நூற்றுக்கு நூறு உண்மை?

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முன்பிருந்தபடி கொண்டுவருவதுதான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும். அதற்குப் போராடியாக வேண்டும். அந்தப் போராட்டம் வீண்போகமலிருக்க வேண்டுமென்றால் அது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அரசு ஒழிந்தால்தான் ஆகும். எனவே இந்த அரசை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க செய்திட அணி திரளுமாறு தமிழ்மக்களை அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

நீட் தேர்வை எழுதுவதற்கு தமிழக மாணவர்கள் அனைவரும் வெளிமாநிலங்களில் தான் எழுத வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சகம் நேரடியாக அறிவிக்காமல் சிபிஎஸ்இ-ன் விதிமுறைகளில் தேர்வு மையங்களைப் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, விண்ணப்பதாரர் கேட்கும் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயமில்லை; இதில் சிபிஎஸ்இ-ன் முடிவே இறுதியானது என்று அறிவித்திருக்கிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய துயரத்தையும் கஷ்டத்தையும் கொடுப்பது இல்லாமல் மொழி பிரச்சினையும் பொருளாதார பிரச்சினையும் தரும் என்பது குறிப்பிடதக்கது. ஆதலால் இதனை கைவிட வேண்டும் என்று கோருகிறேன்.

அதையும் மீறி தமிழக மாணவர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதும் வெளிமாநிலத்தவர்களை தமிழகத்தில் தேர்வு எழுத அனுமதிப்பதும் நடந்தால் அதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர்களையும் தமிழக மக்களையும் அணி திரட்டி போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தமிழ்நாடு என்ற சொல்லை நீக்க மோடி திட்டம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதல் - வேல்முருகன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை