சபாநாயகருக்கு உத்தரவிட இயலாது - ஓபிஎஸ் உட்பட 11 பேர் தலை தப்பியது

by Lenin, Apr 27, 2018, 17:08 PM IST

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏகளை பதவி நீக்க கோரிய வழக்கை தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தான் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டாக கூறினார்.

ஒ.பன்னீர்செல்வத்திற்கு பின்னர் சசிகலா தலைமையிலான அணியின் சார்பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன் பிறகு எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பை கழற்றிவிட்டது. ஒ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

அதேநேரம் திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு வழங்கியது.

அதில் சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது சபாநயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தெரிவித்தனர்.

 

You'r reading சபாநாயகருக்கு உத்தரவிட இயலாது - ஓபிஎஸ் உட்பட 11 பேர் தலை தப்பியது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை