சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி

by Isaivaani, Jun 21, 2018, 09:54 AM IST

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் 24ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் முதல் ராணுவ வீரர்கள் வரையில் அனைவரும் யோகா பயிற்சியில் இன்று ஈடுபட்டனர்.

அதன்படி, யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப் பறிச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ந் தேதி(இன்று) முதல் 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது.
இப்பயிற்சிகளை யோகா ஆசான் சுத்தவெளி சபை ஏ.என்.தனசேகரன் நேரில் அளிக்கிறார். இந்த பயிற்சிகளை 3 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டோர் வரை அனைவரும் எளிதாக செய்யலாம்.

யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் 21-ந் தேதி(இன்று) காலை 6.30 மணி முதல் ஆலந்தூர், மாலை 6 மணி முதல் எழும்பூர், 22-ந் தேதி காலையில் சைதாப்பேட்டை, மாலையில் டி.எம்.எஸ், 23-ந் தேதி காலையில் வடபழனி, மாலையில் அண்ணாநகர் டவர், 24-ந் தேதி காலையில் திருமங்கலம், மாலையில் செனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும்.

தொடர் மெட்ரோ ரெயில் பயணம் உங்கள் பயணத்தை சுகமாக்கும். தொடர் யோகா பயிற்சிகள் உங்கள் உடல்நலனை வலுவாக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை