காட்டுப்பள்ளி துறைமுகத்தைக் கைப்பற்றியது அதானி!

by Rahini A, Jun 30, 2018, 14:26 PM IST

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் இருக்கும் துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

இதனால், இனி காட்டுப்பள்ளி துறைமுகம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிகிறது. அதானி குழுமத்தின் ஒரு அங்கமான அதானி போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எம்.ஐ.டி.பி.எல் நிறுவனங்களிடம் இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஷயம் குறித்து அதானி போர்ட்ஸின் சிஇஓ கரண் அதானி, ‘தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சகம், காட்டுப்பள்ளி துறைமுக பங்குகளை வாங்கியதற்கு அதன் ஒப்புதலைக் கொடுத்துள்ளன. தென்னிந்தியாவில், காட்டுப்பள்ளி துறைமுகத்தை, மிகப் பெரிய துறைமுகமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும்.

40 மில்லியன் மெட்ரிக் டன் அளவை கையாளும் அளவுக்கு இந்த விரிவாக்கம் இருக்கும்’ என்று கூறியுள்ளார். இந்திய அளவில் துறைமுகம் கட்டுதலில் முன்னணியில் அதானி போர்ட்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுப்பள்ளி துறைமுகம், சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் மிகவும் நவீன துறைமுகங்களில் காட்டுப்பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அந்த துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற இடங்களுக்குச் செல்வதும், பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிங்களுக்குச் செல்வதும் சுலபமாக இருக்கும் எனக் கூறப்படுகிளது.

You'r reading காட்டுப்பள்ளி துறைமுகத்தைக் கைப்பற்றியது அதானி! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை