சென்னையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 40 வயது நபர் எரித்துக் கொலை

Jul 19, 2018, 10:21 AM IST

சென்னை ஆலந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலை 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது சுல்தான் (40). இவர், சென்னை ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு முகமது வீட்டில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அருகில் சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது தெரியவந்தது. இதனால், ஜன்னல் வழியாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அந்த முயற்சி தோல்வியடைந்ததால் இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்த போலீசார், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இரும்புக் கம்பியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனிதனின் உடல் ஒன்று கரிக்கட்டையாக எரிந்துக் கிடந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, வீட்டிற்குள் இருந்தது முகமது சுல்தான் தான் என்பது தெரியவந்தது. மேலும், மர்ம நபர்கள் சிலர் முகமதுவின் கை, கால்களை இரும்பு கம்பியால் கட்டிப்போட்டு பின்னர் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்துவிட்டு, பின்னர் கதவை வெளியில் பூட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.இருப்பினும், அக்கம் பக்கத்தில் பொருத்தியிருக்கும்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த பிறகே, உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading சென்னையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 40 வயது நபர் எரித்துக் கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை